பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியது அந்த கட்சிக்கு மாபெரும் இழப்பு என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி கூறினார்.
கள்ளக்குறிச்சியில், தான் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் தராமல் வைத்திருந்த மசோதாக்களை உச்ச நீதிமன்றமே தலையிட்டு அனுமதி வழங்கியது. அது நடந்த பின்னரும் தொடர்ந்து ஆர்.என்.ரவி ஆளுநராக இருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். அவர் ஆளுநர் பதவியில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும்.
பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று சொல்லி வந்த பழனிசாமி, இப்போது அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பணிந்து சரண்டர் ஆகியுள்ளார். இரண்டாம்கட்ட தலைவர்களோடு எந்த ஆலோசனையும் செய்யாமல்தான் அந்த கூட்டணி நிகழ்ச்சி நிறைவேறியது. பழனிசாமி யாருக்கும் தெரியாமல் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படை தன்மையோடு அறிவித்து டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்துள்ளார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி்த் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்துவிட்டு தமிழகத்துக்கு திரும்பியுள்ளார்.
பழனிசாமி அணி 2026 தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. பழனிசாமி தலைமையை எப்பொழுதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரை கட்சித் தலைமையில் இருந்து அகற்ற வேண்டும். அப்போதுதான் கட்சியில் ஒற்றுமை ஏற்படும்.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அந்த கட்சி, இப்போது முழுவதுமாக காணாமல் போன காட்சியை பார்க்க முடிகிறது. அண்ணாமலையின் நீக்கம், அந்த கட்சிக்கு மாபெரும் இழப்பு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.