கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு!

நமது நாட்டில் இப்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச ரூபாய் நோட்டுகளாக 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதற்கிடையே கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளைக் குறைக்கலாம் என அவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு டிமானிடைசேஷன் எனப்படும் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. கடந்த 2016 நவ. 8ம் தேதி இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடையே டிவி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பதாகப் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு மாற்றாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அப்போது மக்கள் ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு இருந்ததாலேயே ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதையும் கடந்த 2023ம் ஆண்டில் மெல்லப் புழக்கத்தில் இருந்து நிறுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இப்போது நமது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் அதிகபட்ச ரூபாய் நோட்டாக ரூ.500 தான் இருக்கிறது.

இதற்கிடையே மத்திய அரசு ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 3 நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்த நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசும் போது தான் சந்திரபாபு நாயுடு இந்த கருத்துகளைத் தெரிவித்தார். ரூபாய் நோட்டுகள் தேவையில்லை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்ட நிலையில், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் தேவையில்லை என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “கடந்த காலங்களில் மத்திய அரசுக்கு ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்திருந்தது. அதில் ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டாலும், ₹500 நோட்டுகள் புழக்கத்தில் தொடர்ந்தன. மேலும் ரூ.2,000 நோட்டுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. கருப்புப் பணத்தை ஒழிக்கவே ரூ.2,000 நோட்டுகளை முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்த காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டன. இதனால் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.500 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இது அரசியலுக்கும் பயனளிக்கும். இப்போது, அரசியல் கட்சிகளும் கூட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நிதி பெறலாம். இதனால் அதிக மதிப்புள்ள நாணயத்தை நீக்குவது பல நன்மைகளையே தந்துள்ளது. ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வேண்டும். நமது தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் தூய்மையான அரசியலைப் பின்பற்றுகிறது. கருப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பதை எப்போதும் ஊக்குவித்தது இல்லை” என்றார்.