வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்காதது வருத்தம் அளிக்கிறது: துரை வைகோ!

“வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம்” என்று துரை வைகோ கூறியுள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1978-ம் ஆண்டு தனது 34- வது வயதில் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சிறப்பாக பணியாற்றினார். நதிநீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத காலங்களில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தவர் வைகோ. மே 1-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை, நெய்வேலி என்.எல்.சி., தனியார்மயமாக்கலை தடுத்தது, ரயில்களில் டி.டி.ஆருக்கு படுக்கை வசதி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க குரல் கொடுத்தது, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுத்தது என பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர்.

கடந்த 1978-ம் ஆண்டு முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது இந்தி திணிப்புக்கு எதிராக பேசினார். தற்பொழுது தன்னுடைய 81-வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் நேரத்திலும் கூட மும்மொழிக் கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராக பேசினார். மூன்று முறை மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தபோதும் அதை மறுத்தவர் வைகோ. அந்த தலைவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு அளிக்காதது எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.

பொன்குடம் உடைந்தாலும் அது பொன்குடம்தான். பாராளுமன்ற புலி வைகோ தான். வைகோவிற்கு பதவி ஒரு பொருட்டல்ல. அவரது மக்கள் பணி எப்போதும் தொடரும். கடந்த ஆண்டு தேர்தல் நேரத்திலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டோம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என திமுக தலைமை தெரிவித்தார்கள். மாநிலங்களவை கிடைக்கும் என நம்பினோம். ஆனால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு வருத்தம் உள்ளது. தமிழகத்தின் நலன் கருதி நாங்கள் அதை கடந்து செல்வோம். கூட்டணியில் தொடருவோம். தமிழகத்தின் நலனுக்காக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம்.

சட்டமன்ற தேர்தலில் வைகோ போட்டியிடுவது குறித்து அவரும் கட்சித் தலைமையும் தான் முடிவெடுப்பார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள். அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அதுபோன்ற நடவடிக்கைகள் தேவையில்லாதது. வரும் ஜூன் 22-ம் தேதி மதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதில் விவாதிக்க உள்ளோம்.

தமிழ் மொழி தான் முதல் மொழி என்பதை மொழியியல் அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இதுகுறித்து கமல் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. தற்போது அந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே உள்ள பிரச்சினை, அவர்களின் கட்சி சார்ந்தது. அதில் நான் கருத்து கூறுவது ஆரோக்கியமானதாக இருக்காது.

பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலம் தமிழகம் என கூறும் நயினார் நாகேந்திரன் மற்ற மாநிலங்களுக்கு சென்று பார்க்கட்டும். அங்கு நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தான் அதிகம். இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ள மாநிலம் தமிழகம் தான். இவ்வாறு துரைவைகோ கூறினார்.