தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது: கமல்ஹாசன்!

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தற்போது தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது அவ்வளவுதான்” என்றார்.

மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று (மே 30) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மநீம கட்சிக்கு இடம் ஒதுக்கியதற்காக முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மநீம கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணை தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:-

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை செய்யுமாறு முதல்வர் கூறினார். அதேபோல், திமுக மூத்த நிர்வாகிகள் தங்கள் அறிவுரைகளையும் அனுபவங்களையும் எங்களிடம் கூறினார்கள். வேட்புமனு தாக்கல் எப்போது தாக்கல் செய்யலாம் என்பது குறித்து அவர்களிடம் கலந்தாலோசிக்கப்படும்.

நான் எப்போதுமே தமிழகத்துக்காகப் பேசிக்கொண்டிருக்கிறேன். தற்போது தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது அவ்வளவுதான். ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்த நீங்கள் இப்போது இணைந்து செயல்படுகிறீர்களே என்று கேட்கிறீர்கள். நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் இணைந்து செயல்படுகிறேன்.

கன்னட மொழி தொடர்பாக நான் தெரிவித்த கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை குறித்தும், நான் மன்னிப்பு கேட்காவிட்டால் எனது படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்தும் கேட்கிறீர்கள். இதற்கு முன்பும் இதுபோன்று நான் மிரட்டப்பட்டிருக்கிறேன். எனது கருத்து தவறாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்பேன். தவறாக இல்லாவிட்டால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது எனது வாழ்வியல் முறை.

இது ஜனநாயக நாடு. நான் சட்டத்தையும் நியாயத்தையும் நம்புகிறேன். எப்போதும் அன்புதான் வெற்றிபெறும். கன்னடம் மீதும், தெலுங்கு மீதும், கேரளம் மீதும் நான் வைத்திருக்கும் அன்பு உண்மையானது. ஏதோ ஒரு மறைமுக செயல்திட்டத்தோடு செயல்படுபவர்களைத் தவிர வேறு யாரும் என்னை சந்தேகிக்க மாட்டார்கள். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய காலகட்டத்தில் குடும்ப அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தை குழி தோண்டி புதைக்கிறது திமுக என்று எதிர்ப்பு அரசியல் செய்தீர்கள். இன்றைக்கு உறவு என்று வந்திருக்கிறீர்களே” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல்ஹாசன், வேண்டாம் என தலையை ஆட்டியபடி நடக்க ஆரம்பித்தார். பிறகு என்ன நினைத்தாரோ திரும்பவும் மைக் முன்பாக வந்து நின்று, “நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணிக்கு வந்துள்ளேன்.” என முகத்தை கடுமையாக வைத்தபடி பதில் அளித்தார். அப்போது உடன் இருந்த நிர்வாகிகள், ஜனநாயகத்திற்காக கமல் கைகோர்த்துள்ளார் என்று மைக்கில் பேசியபடி கிளம்பினர்.

மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி அரசியல் பிரவேசம் செய்தார் கமல்ஹாசன். இடதும் இல்லை வலதும் இல்லை மய்ய அரசியல் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்த சமயத்தில் பிரபலங்கள் பலர் அவரது கட்சியில் சேர்ந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அடிக்கடி ஆலோசனை என அதிரடி காட்டினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக தேர்தல் களம் கண்ட மநீம ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாக்குகளைப் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3.72% வாக்குகளைப் பெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்திருந்தாலும், பல நகர்ப்புற தொகுதிகளில் நாதக, அமமுகவை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் 182 இடங்களில் போட்டியிட்ட மநீம 2.62 சதவீத வாக்குகளைப் பெற்றது. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். அத்தனை இடங்களிலும் தோல்வி அடைந்ததன் காரணமாக கட்சியினர் சோர்வடைந்தனர். கமல்ஹாசனும் படங்களில் நடிப்பதில் பிஸி ஆனதால் பலர் கட்சியை விட்டு விலகினர். இதையடுத்து கமல்ஹாசனும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் சினிமாவில் தீவிரம் காட்டினார்.

‘விக்ரம்’ படத்தின் போது உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கம் காட்டினார் கமல். அதைத்தொடர்ந்து, திமுக உடன் இணக்கம் காட்டத் தொடங்கினார் கமல்ஹாசன். ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையின் போது அவரை சந்தித்து பேசினார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போதே திமுக – காங்கிரஸ் அணியில் கமல் இணைவது உறுதியானது.

2024 மக்களவைத் தேர்தல் வந்த போது பத்து தொகுதிகளில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். அதற்கு ஈடாக மாநிலங்களவை தேர்தலில் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது. இந்த அடிப்படையில் தற்போது ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நான்கில் ஒரு சீட்டை கமல்ஹாசனுக்கு கொடுத்துள்ளது. இதன் மூலம் ராஜ்யசபாவுக்குள் அடியெடுத்து வைக்கிறார் கமல்ஹாசன்.