போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிய ஊதிய உயர்வை வழங்குவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பணப்பலன்களையும் உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தி.மு.க கூட்டணி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ உட்பட 30-க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் புறக்கணித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

15 முதல் 20 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கோரிய தொழிற்சங்கத்தினருக்கு வெறும் 6 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கியதோடு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 22 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் பணப்பலன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததே பேச்சுவார்த்தையை புறக்கணிக்க முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது. அதிலும், 01.09.2023 முதல் 6 சதவிகிதம் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், மொத்தமாக வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையில் 12 மாத நிலுவைத் தொகையை வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறியிருப்பது ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.

பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் நஷ்டத்தை காரணம் காட்டி, பண்டிகை காலங்களிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிய ஊதிய உயர்வை வழங்குவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பணப்பலன்களையும் உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும் என போக்குவரத்துக் கழகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.