ஒரே இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்: ராஜ்நாத் சிங்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) 2025 உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது:-

இந்தியாவின் பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்தது. இது தற்போது, 23,500 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் மூலம் மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் வெற்றியை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல அதன் வளமைக்கும் அவசியம். இது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு தங்களது திறனையும், வலிமையும் வெளிப்படுத்தி உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தியது. போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகளை மட்டும் இந்தியா உருவாக்கவில்லை. அடுத்த தலைமுறை போர் தொழில்நுட்பங்களுக்கும் நாம் தயாராகி வருகிறோம்.

இந்தியா எப்போதும் இதயங்களை பிரிப்பதைப்பற்றி அல்ல இணைப்பதை பற்றி பேசுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் ஆழமான தொடர்பை கொண்டவர்கள். சிலர் மட்டுமே தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இந்தியாவின் அணுகுமுறை மோதல் அல்ல. அது ஒற்றுமை, பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டவர்கள், ஒரு நாள் இந்தியாவின் நீரோட்டத்தில் ஒன்றாக இணைவார்கள். அந்த மக்கள் நம்முடையவர்கள். இது விரைவில் நடக்கும். ஒரே இந்தியா, உன்னத இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.