துணை முதல்வர் ஆக்குகிறேன் என அழைத்தவரே ஆதவ் அர்ஜுனா தான்: சீமான்!

அதிமுக கூட்டணிக்கு வந்தால் தன்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாக ஆதவ் ஆர்ஜுனா கூறியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை என தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசிய வீடியோ பரவி வரும் நிலையில் சீமான் இதனை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை என்று தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கிண்டல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலையாவது 10 பேரை கூட வச்சிக்கிட்டு, தேர்தல்ல நின்னு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என்று ஆதவ் அர்ஜூனா பேசி உள்ளதாக அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், “புறணி பேசுவதற்கெல்லாம் நாங்கள் கருத்து சொல்ல முடியுமா? இதே ஆதவ் அர்ஜுனா தான் அதிமுக கூட்டணிக்கு வந்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று கூறினார். அதற்கு என்ன செய்வது?” என சிரித்தபடி கூறினார்.

மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், “முன்பு இருந்தது போல இப்போது திரையுலகம் இருக்கின்றதா? ஒரு திரைக்கலைஞரையோ ஒரு விநியோஸ்தரையோ யாரையாவது சொல்ல சொல்லுங்கள்.. கேளிக்கை வரியை குறைப்பதால் திரைத்துறைக்கு எந்த நன்மையும் இல்லை, ஒரே ஒரு நிறுவனம், ஒரே ஒரு குடும்பம் மொத்த படங்களையும் வாங்கி விநியோகம் செய்கிறது. அவர்கள் நினைக்கின்ற படம் தான் வெளியாக வேண்டும், அவர்கள் நினைக்காத படம் வெளியாகாது. அது மாதிரி தான் இருக்கிறது. AD தயாரிப்பாளர் சங்கமும் கமலஹாசனும் வைத்த கோரிக்கையை ஏற்று கேளிக்கை வரி குறைக்கப்பட்டதாக சொல்கிறீர்கள். ஒரு தலைவன் என்பவன் பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் தானாக சரி செய்ய முயற்சி எடுக்க வேண்டும், யாராவது கோரிக்கை வைத்தால் தான் சரி செய்வீர்களா? தேர்தலுக்கு ஆறு மாதங்கள் உள்ள நிலையில் கேளிக்கை வரியை குறைக்கிறீர்கள்.

மின்கட்டணம், சொத்து வரி எல்லாம் எப்போது குறைப்பீர்கள்? அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? அதனுடைய பெயரே கேளிக்கை வரிதான். இதனால் திரையுலகை வாழ வைத்துவிடுவார்களா? இது அவர்களுக்கு வருகின்ற வருவாய் தான். வேறு யார் இதில் வாழப்போவது? எத்தனை படங்கள் வெளியாகாமல் உள்ளது, எத்தனை படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது, பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சினிமா துறையை விட்டு விலகி சென்று விட்டார்கள். எந்தப் படம், யார் தயாரித்தாலும் நாங்கள் வெளியிட்டால்தான் திரையரங்கம் கிடைக்கும் இல்லையென்றால் நாங்களே தயாரிப்போம். எங்கள் நிறுவனத்தில் நடித்தால்தான் திரையரங்கிற்கு செல்லும் என்ற நிலை இருக்கிறதா இல்லையா சொல்லுங்கள்?” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.