ராமதாஸ் – அன்புமணி மோதலால் மனஉளைச்சலில் தவிக்கிறேன்: ஜி.கே.மணி!

ராமதாஸ்-அன்புமணி மோதலால் மன உளைச்சலில் தவிக்கிறேன் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் உள்ளிட்டோருடன் நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது:-

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். பாமக பலமான கட்சி; தனித்தன்மை, கொள்கை, லட்சியத்துடன் இருக்கும் கட்சி. தற்போது கட்சிக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளதைப் பார்க்கும்போது மிகவும் வேதனைப்படுகிறேன். எதையும் சொல்லக் கூடாது என்று கருதினாலும், எதுவும் சொல்லாமல் ஓடி விட்டார் என்று கூறுவார்கள் என்பதால், செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கிறேன்.

பிரச்சினைகள் ஓய்ந்து, நிலையை சீராக வேண்டும் என்று அனைவரும் கருதுகிறோம். மீண்டும் பழைய நிலை திரும்ப வேண்டும். குடும்ப பாசத்துடன் இருக்கும் கட்சியாக மாற வேண்டும். தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், வலிமையான கட்சியாக பாமக இருக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

பாமக முன்னாள் தலைவரான பேராசிரியர் தீரன் கூறும்போது, “பாமக வலிமையாக இருந்தால்தான், எங்களுக்கு மரியாதை இருக்கும். பல்வேறு அரசியல் கட்சி நண்பர்கள் இதுகுறித்து பேசி வருகின்றனர். ராமதாஸ்-அன்புமணியை சமாதானம் செய்ய முயற்சிக்கிறேன். பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை இருவரும் பொறுமையாக இருக்க வேண்டும். இருவரும் சந்தித்துப் பேசுமாறு இருவரிடமும் வலியுறுத்தியுள்ளேன். பாமக இரண்டாக பிளவுபடுவதை தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். ராமதாஸ் வழிகாட்டுதல்படி அனைவரும் செயல்பட வேண்டும். அதுதான் அன்புமணிக்கும், கட்சிக்கும் நல்லது” என்றார்.