இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என யாரையும் கூற முடியாது: மாணிக்கம் தாகூர்!

“பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர் தான். அவரைப்போல் யாரும் வர முடியாது. இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என யாரையும் கூற முடியாது” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் திறப்பு விழா இன்று (மே 31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு நிழற்குடை மற்றும் கலையரங்கத்தை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக தலைவர் விஜய்யை இளம் காமராஜர் என கல்வி விருது வழங்கும் விழாவில் கூறியது தொடர்பாக கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர் தான். அவரைப்போல் யாரும் வர முடியாது. இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என யாரையும் கூற முடியாது. மேலும், காமராஜர் செய்த சாதனைகளை வேறு யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது. எனவே மிகைப்படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு யாரையும் பேசுவது என்பது சரியாக இருக்காது” என்றார்.

மேலும் அவர், “நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தை வைத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னடர், தமிழர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். கன்னட மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு. திராவிட மொழிகளுக்கு இடையே உள்ள அனைத்து சிறப்புகளையும் நாம் போற்ற வேண்டும். எந்த மொழி மூத்த மொழி என்பதை பேச வேண்டியதில்லை. இந்த வெறுப்பு அரசியலை பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் செய்து கொண்டிருக்கிறது.

கீழடியில் வரலாற்று ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இங்கிருந்து தமிழுக்கு குரல் கொடுப்பதை விட கர்நாடகாவில் சென்று குரல் கொடுக்க வேண்டும். பொறுப்போடு அரசியல் செய்ய வேண்டும். கர்நாடகாவில் கமல்ஹாசனின் உருவப்படத்தை எரிப்பதை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும். மேலும், கன்னட மொழி விவகாரம் குறித்து கமல்ஹாசன் ஒரு நடிகராக பேசியிருப்பதை நாம் பெரிதுபடுத்த தேவையில்லை. மொழி குறித்து வரலாற்று அறிஞர்கள் பேச வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் பேசுவது தேவையற்றது.

பாமக ஒரு சாதி கட்சி. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்பாவும் மகனும் பொழுதுபோக்காக செய்கிறார்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையையும் பாஜக தன்னுடைய கிளை அமைப்பாக செயல்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறினார்.