பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார்?: ஜெய்ராம் ரமேஷ்!

இந்தியா – பாகிஸ்தான் அணுஆயுத மோதலை தான் தான் தடுத்ததாக 11-வது முறை டொனால்ட் ட்ரம்ப் கூறிவிட்டார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனத்தை கலைப்பார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில் கூறியுள்ளதாவது:-

பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 21 நாட்களில் 11வது முறையாகக் கூறியுள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அணுஆயுத மோதலில் ஈடுபடாமல் தடுக்க வர்த்தகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றதாக ட்ரம்ப் கூறுகிறார். அதோடு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகக் கருதும் அமெரிக்காவின் பார்வையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது

ஆனால் டொனால்ட் ட்ரம்ப்பின் நண்பர் நரேந்திர மோடி, இதனை மவுனத்துடன் தொடர்ந்து புறக்கணிக்கிறார். பிரதமர் ஏன் பேசவில்லை? மோடி எப்போதும் செய்வதை (அதாவது பொய் பேசுவதை) அதிபர் ட்ரம்பும் செய்கிறாரா? அல்லது அவர் 50% உண்மையைப் பேசுகிறாரா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகள் இருதரப்பு ரீதியாகவும், மூன்றாம் தரப்பு தலையீடு இல்லாமலும் தீர்க்கப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் டொனால்டு ட்ரம்பின் கருத்தை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதல் நிறுத்தப்பட்டதில் அமெரிக்காவின் பங்கு பற்றி விளக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

முன்னதாக அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “அடுத்த வாரம் பாகிஸ்தான் பிரதிநிதிகள்(அமெரிக்கா) வருகிறார்கள். இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்வதற்கு நாங்கள் மிக நெருக்கமாக இருக்கிறோம். அவர்கள் ஒருவருக்கொருவர் போரில் ஈடுபட்டால், அவர்களுடன் ஒப்பந்தம் செய்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இருக்காது. இந்தியாவையும், பாகிஸ்தானையும் நாங்கள் கையாள்கிறோம். அணு ஆயுதப் போரை நிறுத்த முடிந்தது என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பொதுவாக அதை தோட்டாக்கள் மூலம் செய்கிறார்கள். நாங்கள் அதை வர்த்தகம் மூலம் செய்கிறோம். அதனால் நான் அதைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மிகவும் மோசமான சாத்தியமான போர் நடந்து கொண்டிருந்தது. இப்போது, ​​நீங்கள் பார்த்தால், அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.