தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி என, வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை மக்கள் சேவை மையம், பிஎஸ்ஜி மருத்துவமனை, வேர்ல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து நடத்தும் ‘நலம் இலவச மருத்துவ முகாம்’ கோவை மாநகராட்சி 82-வது வார்டு தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 1) நடந்தது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
நலம் மருத்துவ முகாம் மூலம் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதனை ஒட்டி வீட்டு தொடர்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தமிழகத்தில் முருகன் கோயில்கள் உள்ள இடங்களில் அரசு தலையிட்டு பல்வேறு பிரச்சினைகள் செய்வது குறித்து மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். முருக பக்தர்கள் மாநாடு ஆன்மிக எழுச்சியை உண்டாக்கும்.
நடிகர் கமலஹாசன் 2 தேர்தல்களில் போட்டியிட்டார். அப்போது அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். மேலும், மேல்சபை எம்.பி. பதவிக்காக தி.மு.க. கூட்டணிக்கு சென்று உள்ளார். சினிமா ஷூட்டிங்கில் காமிரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார். எப்படியாவது பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற சுயநலத்துடன், தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம் செய்து உள்ளார். பொதுமக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற முடியாமல், தி.மு.க.வின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்த பதவியை பெற்று உள்ளார்.
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது அண்ணன் அழகிரியும் சந்தித்து பேசியது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அண்ணன்- தம்பிகள் பிரிவது சேருவது இயல்பு. அதே நேரத்தில் மதுரையில் முதலமைச்சர் பார்வையிட சென்றபோது அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை துணி போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் தவறானது. கோவையிலும் பல இடங்களிலும் உள்ள குப்பைகளை இதுபோன்று தான் மறைத்து வைத்து வருகிறார்கள்.
நாட்டில் நக்சல் தீவிரவாதம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி வழங்குகிறது என்ற விவரங்கள் குறித்து பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் பேசியுள்ளார். இவர்களது இயலாமைக்கு மத்திய அரசை குறை கூறுகின்றனர்.
‘டாஸ்மாக்’ முறைகேடு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. இவ்வாறு வானதி கூறினார்.