தமிழகத்தில் பாவச் செயல்களை திமுக அரசு ஊக்குவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால், மருத்துவர்கள் 15 பேர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளையாக இருக்கிறது. மது, போதை பொருளை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. விவசாயிகளிடம் செய்த நெல் கொள்முதலுக்கு ரூ.610 கோடியை அரசு வழங்கவில்லை. அரக்கோணம் பெண் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் பெயர் தெய்வச்செயல். ஆனால், அவர் செய்வதெல்லாம் பாவச்செயல். இவ்வாறு பாவச்செயல் செய்வோருக்குதான் திமுக அரசு ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிப்பாரா? திமுக ஆட்சி மீது அனைத்து தரப்புக்குமே அதிருப்தி இருக்கிறது. மக்கள் விரோத திமுக ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்காக முழு மூச்சாக பாடுபட தயாராக இருக்கிறோம். அனைவரும் ஓரணியில் திரண்டால் மட்டுமே இது சாத்தியம். பாஜக கூட்டணி பலமாக இருக்கிறது.
அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு. சில நேரங்களில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இடம்பெறும் விஷயங்கள் தவிர்க்க முடியாதது. அடுத்த மொழி குறித்து குறை சொல்வதை ஏற்க முடியாது. ஆறுகளை சுத்தப்படுத்த வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். அதை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. அதேபோல் தாமிரபரணியை சுத்தப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியபோதும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.