குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்!

குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்..!

திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை.!

உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!

குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!

குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி எம்.பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!

‘இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்..

நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்..

தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர்! குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.