தமிழர் நல அரசியல் இயக்கங்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு கருத்து முரண்களால், முட்டிமோதி நிற்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்கு, தமிழர் ஓர்மைக்கு, தமிழர்களின ஒன்றுபட்ட நல்வாழ்விற்கு, இன விடுதலைக்கு, மொழி மீட்சிக்கு உருவான தமிழர் நல அரசியல் இயக்கங்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு கருத்து முரண்களால், முட்டிமோதி நிற்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களின் புரட்சி தமிழகம் – பறையர் பேரவை அமைப்பு மற்றும் அண்ணன் திருமாவளவன் அவர்களின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரு இயக்கங்களில் உள்ளவர்கள் மாறிமாறி கடுமையாக விமர்சித்துக்கொள்வது விரும்பத்தகாத கெடுநிகழ்வாகும்.
ஒரு சமூகப் பின்னணியிலிருந்து அதன் முன்னேற்றத்திற்காக உருவான இயக்கங்கள் தங்களுக்கு எதிராக உள்ள சமூகக்கொடுமைகள் எனும் பல ஆண்டுகால பகையை ஒழிப்பதற்கு மாறாக, தங்களுக்குள்ளாகவே கருத்து முரண்பட்டுப் பரம்பரை பகைபோல பிரிந்து, பிளந்து நிற்பது மிகுந்த கவலையளிக்கிறது.
அரசியல் கருத்து முரண்களால் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் என்பதையும் தாண்டி, ஒருவருக்கொருவர் மாறி மாறி வசைமாரிப் பொழிவதும் மோதிக்கொள்வதும் தீரா மனவலியைத் தருகிறது.
ஒரே தத்துவம் ஏற்று ஒரே இலட்சியம்கொண்டு, உருவான சகோதர இயக்கங்கள் ஒன்றோடொன்று முரண்பட்டு நிற்பதும், ஒரே இயக்கத்திற்குள் உள்ளவர்கள் பொதுவெளியில் முரண்பட்டு மோதிக்கொள்வதும், தமிழ் ரத்த சொந்தங்கள் தங்களுக்குள் யுத்தம் செய்து ரத்தம் சிந்துவது எதன்பொருட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும்.
உடனடியாக இரு இயக்கப் பெருந்தகைகளும் கலந்துபேசி உடனடியாக இம்மோதலை முடிவுக்கு கொண்டுவந்து இயக்க உறவுகளிடையே அமைதியை ஏற்படுத்த வேண்டுமென அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.