முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவே மம்தா ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கிறார்: அமித் ஷா!

முஸ்லிம் வாக்குவங்கியை திருப்திபடுத்துவதற்காக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்பு திருத்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நடந்த பாஜக கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்தி படுத்துவதற்காக மம்தா, ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் அவர் இந்தநாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவமதிக்கிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தின் தாய்மார்களும் சகோதரிகளும் மம்தா பானர்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்ததற்காக பாடம் புகட்டுவார்கள்.

ஏப்ரல் மாதத்தில் முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் சம்மந்தப்பட்டுள்ளனர். அது அரசு ஆதரவுடன் நடந்த ஒரு கலவரம். அக்கலவரத்தின் போது எல்லைப் பாதுகாப்புப் படைகளை நிறுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால், மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் வன்முறை தொடர்ந்தது.

சமாதான அரசியலுக்காக மம்தா பானர்ஜி வக்பு சட்டத்தை எதிர்த்தார். அவர் வங்கதேசத்தினருக்காக மேற்குவங்கத்தின் எல்லைகளைத் திறந்து விட்டார். அவரால் ஊடுருவலை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. பாஜக வால் மட்டுமே ஊடுருவலைத் தடுத்து நிறுத்த முடியும்.

மேற்கு வங்கத்தில் ஆளும் டிஎம்சி அரசு, பிஎஸ்எஃப் படைகள் நிறுத்துவதற்கு நிலம் வழங்கவில்லை. மேற்குவங்க அரசு பிஎஸ்எஃப் படைகளை நிலைநிறுத்துவதற்கு நிலம் வழங்கியதும் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். ஆனால், மம்தா பானர்ஜி அரசு நிலம் வழங்காது. அது தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக,ஊடுருவல் தொடர்வதை விரும்புகிறது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

முன்னதாக, ஏப்.22-ல் நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதலுத்கு எதிரான ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்வதாக சமீபத்தில் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.