தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய பாடுபடுவேன்: கவுதமி!

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய பாடுபடுவேன் என்று கவுதமி கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவிலில் நடிகையும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளருமான கவுதமி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பக்தர்கள் செல்பி எடுத்தும், கைகுலுக்கியும் மகிழ்ந்தனர்.

பின்னர் நடிகை கவுதமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசியலில் ஒழுங்காக கால் எடுத்து வைக்காத ஆதவ் அர்ஜுனா, 4 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக சிறப்பாக ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவது கண்டிக்கத்தக்கது. பெரியவர்களுக்கு மரியாதை தருவது என்பது கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதா? சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அது போகப்போக தெரியும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய பாடுபடுவேன்’ என கூறினார்.