கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம்: சீமான்!

கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், கல்வி விருது வழங்கும் விழாவில், விஜய்யை, இளைய காமராஜர் என்று ஆசிரியர் ஒருவர் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “இதையெல்லாம் கேட்க நேரிடும் என்றுதான் ரொம்ப நாளைக்கு முன்னாடியே காமராஜர் செத்துப் போய் விட்டார். இளைய காமராஜர் என்று சொன்னவருக்கு காமராஜர் யார் என்றே தெரியாது. அந்த ஆசிரியர் என்ன படித்தாரோ, காமராஜரை படிக்கவில்லை. காமராஜர் 50 படம் நடித்து முதல்-அமைச்சராக வரவில்லை. அரசியலுக்கு வரவில்லை” என்று கூறினார்.

சீமான் மேலும் கூறியதாவது:-

நான் யாருடனும் கூட்டு சேரவில்லை. சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு பொரியல். சண்டை என்றால் தனித்துதான் போட்டியிடுவேன். கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம்? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செம்மொழி என அறிவித்ததால், செம்மொழி ஆனதா? தமிழ் செம்மொழி என அனைவரும் கூறுகின்றனர். நீங்கள் யார் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர?

கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாள் என முதல்வர் அறிவித்தால், கட்சிக்காரர்கள் ஏற்பார்கள். மக்கள் ஏற்க மாட்டார்கள். மொழிக்காக உயிர்நீத்தவர் தாளமுத்து நடராஜன். தாளமுத்து நடராஜன் இறந்த நாளை செம்மொழி நாளாக அறிவிக்க வேண்டும்.

டெல்லியில் நான்கு நலைமுறையாக தமிழர்கள் வசித்து வந்த மதராசி முகாம் இடித்து தள்ளப்பட்டது. நாம் தமிழர் கட்சி டெல்லியில் இதற்காக போராடியது. 39 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக என்ன செய்திருக்கிறது. நாங்கள் மற்ற இடங்களில் இருந்து விரட்டப்படுகிறோம் ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்தை நிர்ணயிக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.