தமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறாமல் , தெற்கு ரயில்வே பிரச்சினையை மூடி மறைக்கவே முயல்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் ரயில் வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்பட்டது குறித்து, தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர், ரயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கம் திட்டங்கள் குறித்த பொதுவான கொள்கையாகும். நான் எழுப்பியது பொதுமேலாளருடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்ட விபரங்கள் சார்ந்தது.
முடக்கப்பட்ட புதிய பாதை ரயில் திட்டங்கள், நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு இப்பொழுது மீண்டும் சர்வேக்கு மாற்றப்பட்டுள்ள மூன்று இரட்டை பாதை திட்டங்கள் குறித்த விபரங்கள் ஆகும். தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர், ரயில்வே வாரியத்துக்கு எழுதிய கடிதத்தில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து நான் கேள்வி எழுப்பி இருந்தேன். ஆனால், தெற்கு ரயில்வே அதற்கு பதில் சொல்லாமல் திட்டங்கள் குறித்த பொதுவான கொள்கைகளை அறிவித்துள்ளது.
“நீங்கள் கூறியது தவறு. திட்டங்கள் முடக்கப்படவில்லை” என்று பதில் கூறியிருந்தால் நான் வரவேற்று இருப்பேன். ஆனால், அதைப் பற்றி எதுவும் கூறாமல், பொதுவான திட்டங்கள் குறித்த கொள்கையை அறிவித்ததன் மூலம் தெற்கு ரயில்வே நிர்வாகம், பிரச்சினையை மூடி மறைக்கவே முயல்கிறது.
தமிழகத்தில் புதிய அகல ரயில் பாதை பணிகளின் மொத்த நீளமான 864.5 கி.மீ.ல் 571.33 கி.மீ (66%) புதிய ரயில் பாதை திட்டங்களின் நிதி முதல் காலாண்டிலேயே திருப்பி அளிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. சென்னை – கடலூர் மற்றும் ஈரோடு – பழனி ஆகிய ரயில் பாதை திட்டங்கள் நிறுத்தப்படலாம் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் கடிதம் எழுதியுள்ள நிலையில், இது குறித்து ரயில்வே அமைச்சர் விளக்குவாரா? தமிழகத்தின் 47.8 சதவீதம் புதிய அகல ரயில் பாதை திட்டங்கள் முடக்கப்படுவது உண்மைதானா என்பதை அமைச்சர் தெளிவு படுத்துவாரா?
இந்த கேள்விகள் தமிழகத்தின் அடிப்படை வளர்ச்சியோடு சம்மந்தப்பட்டது. எனவே, மத்திய அரசின் துரோக நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.