“தவெக கட்சி கொடியில் யானையை பயன்படுத்தப்பட்டுள்ளதை போல உதய சூரியன், அண்ணா, கை போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அனுமதிக்குமா?” என கட்சிக் கொடி தொடர்பான வழக்கில் பகுஜன் சமாஜ் சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், “தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல. தமிழகத்தின் கலாச்சார, வரலாற்று பெருமைகள் மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவெக கொடி தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை. எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (ஜூன் 4) சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன் , “எங்களுடைய சின்னமான யானையை தவெக கட்சி கொடியில் பயன்படுத்தப்பட்டுள்ளதை போல் உதய சூரியன், அண்ணா, கை போன்ற படங்களை திருத்தம் செய்து மற்ற கட்சி கொடிகளில் பயன்படுத்த திமுக அதிமுக போன்ற கட்சிகள் அனுமதிக்குமா? எங்களுடைய தேசிய சின்னமான யானையை வேறு எந்த கட்சிகளும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது,” என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் இதுகுறித்து விளக்கம் அளிக்க தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.