நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கி வருகிறார். இந்த நிலையில் 2 கிராம் தங்கத்துக்காக பெற்ற குழந்தைகளை ஒரு கூத்தாடியை கட்டி பிடிக்க வைத்து முத்தம் கொடுக்க வைப்பதாக விமர்சித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இதை அடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது அரசியல்வாதியாக மாறி இருக்கிறார் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானவர், அதற்கு பிறகு போராடி தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தார். அக்டோபர் மாதத்தில் பிரம்மாண்ட மாநாடு மூலம் நேரடி அரசியலுக்கு வந்த அவர், அதற்கு பிறகு தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். கடைசியாக ஜனநாயகன், படத்தில் நடித்து முடித்து இருக்கும் அவர் இனி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மண்டல வாரியாகவும் சட்டமன்ற தொகுதி வாரியாகவும் அடுத்தடுத்து விஜய் மக்களை சந்திக்க இருப்பதாகவும், இனி 24 மணி நேரமும் அரசியல் தான் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே அதாவது 2023 ஆம் ஆண்டிலேயே விஜய் மாணவர்கள் சந்திப்பை நடத்தினார். அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவ மாணவிகளை வரவழைத்து அவர்களுக்கு விருந்தளித்து பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்து வருகிறார். அதேபோல கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் விஜய்யின் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று இரண்டாவது கட்டமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளை விஜய் சந்தித்து வருகிறார். விஜய்யை சந்திக்க வரும் மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். மேலும் மாணவர்களுடன் ஹார்ட்டின் சிம்பல் காட்டுவது, விஜய் படங்களில் வருவது போல போஸ் கொடுப்பது, கட்டி பிடிப்பது, அன்பு மிகுதியால் முத்தம் கொடுப்பது என மாணவ மாணவிகளும் விஜயின் சந்திப்பை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜயின் மாணவர் சந்திப்பை விமர்சித்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவரான வேல்முருகன். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:-
இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. நம்ம முட்டாப் பயலுக.. நான் நடிகனை குறை சொல்ல மாட்டேன். ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறான். இன்னும் ஓரிரு மாதங்களில் பிளஸ் டூ முடித்து, டிகிரி முடிக்க இருக்கும் கல்லூரி பெண்களை கூட்டிட்டு போறாங்க.. அறிவு வேண்டாம் தமிழனுக்கு.. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெண்ணை, நாளை மாற்றான் வீட்டுக்கு மனைவியாக போகிற பெண்ணை.. அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது.. ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க. இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க.. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க.. ஆனால் இப்படி செய்யக்கூடாது: என பேசி இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. விஜய் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், விஜயிடம் அன்பை பறிமாறும் மாணவ மாணவிகளை இழிவு படுத்துவது போல இவரது பேச்சு இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.