பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி இடையிலான 3 மணி நேர சந்திப்பு நிறைவடைந்துள்ளது. நீண்ட கால நண்பரான ராமதாஸை சந்திக்க வந்ததாக கூறிய குருமூர்த்தி, பாஜகவுக்காக தைலாபுரம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி தைலாபுரம் வந்ததே தெரியாது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. அடுத்தக் கட்டமாக பாஜக தரப்பில் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அன்புமணி திடீரென தைலாபுரம் புறப்பட்டார். தைலாபுரம் வந்த அன்புமணி, சுமார் 30 நிமிடங்கள் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார். அன்புமணி சென்ற மறுநிமிடமே ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் வந்தனர். ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். இதனால் ராமதாஸ் – குருமூர்த்தி இடையிலான சந்திப்புக்கு அமித் ஷா வருகையே காரணம் என்று பார்க்கப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்பாக ஏற்கனவே சைதை துரைசாமி தைலாபுரம் வந்து ராமதாஸை சந்தித்திருந்தார். தற்போது மீண்டும் வந்த சைதை துரைசாமி, உடன் குருமூர்த்தியையும் அழைத்து வந்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது.
இதன்பின் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் குருமூர்த்தி இடையிலான சந்திப்பு சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது. இதன்பின் காரில் வெளியில் வந்த குருமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து, நான் பாஜகவுக்காக தைலாபுரம் வரவில்லை. ராமதாஸ் உடன் எனக்கு நீண்ட கால நட்பு இருக்கிறது. நண்பனை பார்க்கவே வந்தேன். வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அன்புமணியும் தைலாபுரம் வந்தாரே என்ற கேள்விக்கு, அன்புமணி தைலாபுரம் வந்தாரா என்று அருகில் இருந்த சைதை துரைசாமியிடம் அதிர்ச்சியாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அன்புமணி தைலாபுரம் வந்தது எனக்கு தெரியாது. பிரச்சனை நடக்கும் இடங்களுக்கும் நான் செல்லவில்லை. நான் சொல்லும் இடங்களில் பிரச்சனை உள்ளது என்று தெரிவித்தார்.