உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் ஜூன் 7ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1-ம் தேதி, மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வரும் 7-ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.