கர்நாடக அரசும், ஆர்.சி.பி. நிர்வாகமும்தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி!

கர்நாடக அரசும், ஆர்.சி.பி. நிர்வாகமும்தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டு. கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை கொண்டாட கர்நாடக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, ஆகியோர் தலைமையில் பெங்களூருவில் பாராட்டு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற இருந்த நிலையில், பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த உயிரிழப்புகளுக்கு கர்நாடக அரசும், ஆர்.சி.பி. நிர்வாகமும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் இன்று(நேற்று) நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பெங்களூரு அணி 18 ஆண்டுகளில் முதன் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது. அதன்பின் 12 மணி நேர அவகாசத்தில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்.சி.பி. அணி நிர்வாகமும்தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில் அவர்களின் உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.