நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது!
அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை! என்று சீமான் கூறியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்!
நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது!
அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை!
நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில்
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.
நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடுத்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள்.
மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எதை நாம் உண்ணப்போகிறோம்?
எப்படி சுவாசிக்க போகிறோம்?
உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு?
நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்?
வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்!
வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்!
நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து.., நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.