ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் பேசிய எனது பேச்சை முழுமையாக கேட்காமல், நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சொல்ல கூடாது என்று தவாக தலைவர் வேல்முருகன் பதில் அளித்துள்ளார். எனது உரையில் விஜயை கொஞ்சம் கூட விமர்சிக்காத போது, அரைவேக்காடுகளை வைத்து பேச வைப்பது நாகரீக அரசியலுக்கு அழகல்ல என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் சந்தித்தார். இதனால் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுகிறதா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து வேல்முருகன் கூறியதாவது:-
ராமதாஸ் தான் எங்களை வழிநடத்தினார். பாமக மூலமாக 2 முறை எம்எல்ஏ-வாக செயல்பட்டுள்ளேன். அந்த அடிப்படையில் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் வருந்தி அவர் கண்ணீர் சிந்தியதால், நாங்கள் வருத்தம் அடைந்தோம். பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீர வேண்டும் என்று மனதார விரும்புகிறோம்.
மனவருத்தத்தில் இருந்ததால், எனது சகோதரர் ராமதாஸ்-க்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். அதேபோல் அன்புமணியும் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அண்ணனான அன்புமணி கடந்த கால கசப்பை மறந்து, எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசலாம் என்று கூறினார். அனைத்து கட்சி கூட்டம், என்எல்சி கூட்டத்தின் போதும் அன்புமணி வாஞ்சையுடன் பேசி இருக்கிறார். அவர்கள் இருவரும் எங்களுடன் மீண்டும் பேசிய மன நிம்மதியை அளிக்கிறது. இதன் காரணமாகவே பாமக, அன்புமணி உள்ளிட்டோரை விமர்சிப்பதை தவிர்த்து சுமூக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். ஒருபோதும் பாமகவில் இணையப் போவதில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விஜய் மீதான கொச்சையான விமர்சனம் குறித்த கேள்விக்கு, 35 ஆண்டு காலம் திரையில் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். பெற்றோர் தங்களின் குழந்தைகளை சினிமாக்காரர்களுடன் அதிக நெருக்கம் காட்ட அனுமதிக்க கூடாது என்று கூறினேன். சிலர் வாழும் காமராசர் என்றெல்லாம் பேசினார்கள். அதற்கு பதில் சொல்வதை போல், காமராசரை விஜய் உடன் ஒப்பிடுவதை விமர்சித்தேன். கலையை கலையாகவும், நடிகரை நடிகராக மட்டுமே பார்க்க வேண்டும்.
சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் பேசிய எனது உரையை முழுமையாக கேட்காமல், சில அரைகுறை வேட்காடுகள், என்னை மன்னிப்பு கேட்க அறிக்கையிடுவது எல்லாம் இங்கு வேண்டாம். வேல்முருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது, யூட்யூப் மூலம் பேச வைப்பதெல்லாம் நிறுத்தி கொள்ள வேண்டும்.. விஜயை ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை. விஜய்-க்கு நீங்கள் இன்று ரசிகர்களாக இருக்கலாம். என் கள அனுபவம் 40 ஆண்டு காலம். நேற்று பெய்த மழையில் இன்று முழைத்த காளான்கள். தமிழக அரசியல் வரலாறு தெரியாவர்களை விஜய் பேச அனுமதிக்க கூடாது. நான் தவறாக பேசி இருந்தால், பத்திரிகையாளர்களை சந்தித்து விஜய் கேட்க வேண்டும்.. அதைவிடுத்து அஞ்சான், குஞ்சான்களை வைத்து பேச வைப்பது சரியல்ல.. இது தமிழர் நாகரீக அரசியலுக்கு அழகல்ல என்று கூறியுள்ளார்.