“சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசு அறிவிக்கின்ற அறிமுகப்படுத்தும் திட்டங்களை உங்கள் சொந்த திட்டமாக நினைத்து மக்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா இன்று (ஜூன் 5) நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வேறு எந்த மாநிலத்திலும் “இத்தனை இயக்கங்கள், திட்டங்கள் இல்லை” என்று நான் அடித்து சொல்கிறேன். அந்த அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் தொலைநோக்கோடு பல முன்னெடுப்புகளை செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்.
அகத்தியமலை யானைகள் காப்பகம், தெற்கு காவிரி வனவிலங்கு காப்பகம், தந்தை பெரியார் வன உயிரின காப்பகம், கடவூரில், இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம், நஞ்சராயன் பறவைகள் காப்பகம், கழுவேலி பறவைகள் காப்பகம் மற்றும் இந்தியாவின் முதல் ‘கடற்பசு காப்பகம்’ ஆகிய 7 வன உயிரின சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி வலையமைப்பின்கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
2 ஆயிரத்து 403 ஹெக்டேர் பரப்பளவில், புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கி இருக்கிறோம். 1,207 ஹெக்டேர் தரங்குன்றிய சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுத்திருக்கிறோம். முக்கியமான ‘நீல கார்பன்’ சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு புத்துயிர் வழங்கியிருக்கிறோம். இந்த வரிசையில், மன்னார் வளைகுடாவில் இருக்கும் தனுஷ்கோடியில், தமிழ்நாட்டின் முதல் கிரேட்டர் ஃபிளமிங்கோ சரணாலயம் குறித்த அரசு அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமையடைகிறேன்.
பல்லுயிர்ப் பெருக்கம், காலநிலை மாற்றம் – இந்த இரண்டுக்கும் இடையில் வலுவான தொடர்பு இருக்கிறது. இதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டு வரும் முன்னோடி மாநிலமாக இருப்பது நம்முடைய தமிழ்நாடுதான். யானைகள் மற்றும் புலிகள் போன்ற காடுகளின் ஆதாரமான உயிரினங்களைப் பாதுகாப்பதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். மற்றொருபுறம் அதிகம் அறியப்படாத மற்றும் அருகி வரக்கூடிய உயிரினங்களை, தமிழ்நாடு அருகிவரும் உயிரினங்கள் நிதியத்தின் மூலம் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தொடக்கத்திலேயே நாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியைப் பற்றி சொன்னேன். அரசாங்கம் செயல்படுத்துகின்ற திட்டங்களால் மட்டும் இந்த நெருக்கடியைத் தீர்த்துவிட முடியாது. ஊர் கூடித்தான் தேர் இழுக்கவேண்டும். அதனால்தான், தொழில்களுக்கான ‘தன்னார்வ பசுமை மதிப்பீட்டை’ அறிமுகப்படுத்தி இருக்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்கின்ற பொறுப்புணர்ச்சி, தொழில்துறை வளர்ச்சியின் மையமாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கின்ற செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சி இலக்கோடு இணைந்து செயல்பட முடியும்.
நம்முடைய கனவு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மட்டும் கிடையாது. அது ஒரு பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த மாற்றத்தை வழி நடத்துவதற்கான கருவிகள், வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளை நம்முடைய இளைஞர்களுக்கு வழங்க முதலமைச்சரின் பசுமை தோழர்களின் முதல் பேட்ச், இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறார்கள். இரண்டாவது பேட்ச் விரைவில் இணைவார்கள். முதல் பேட்ச் தொடங்கிய பணிகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள்.
இந்த ஆண்டிலிருந்து, நம்முடைய தனித்துவமான உயிரினங்களின் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ச்சியாக புதிய பாதுகாப்பு மையங்கள் நிறுவப்படும். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பசுமைச் சான்றிதழ் பெறும் கட்டிடமாக இது உருவாகும்.
2021-ம் ஆண்டு, பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராட ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை தொடங்கினோம். இது அரசின் திட்டமாக இருந்தால் போதாது. மக்கள் இயக்கமாக மாறவேண்டும். அரசாங்கம் திட்டங்களை கொண்டுவர தான் முடியும். அதன் வெற்றி மக்கள் தங்களின் அன்றாட பழக்கங்களை மாற்றிக்கொள்வதில்தான் இருக்கிறது. தொடக்கத்தில் கஷ்டமாகதான் இருக்கும். ஆனால், வேறு வழி இல்லை. இந்த ஆண்டு சுற்றுச்சூழல் நாளின் ‘தீம்’ “நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம்” என்பதுதான். இன்றைக்கு பிளாஸ்டிக் மாசுபாடு நம்முடைய பூமியை மூச்சுத் திணற வைத்துக்கொண்டு இருக்கிறது. வெளியே புறப்பட்டால், செல்போனை சார்ஜ் செய்துவிட்டுதான் எல்லோரும் புறப்படுகிறோம்.
அதுபோல, மறக்காமல் துணிப்பை மற்றும் தண்ணீர் பாட்டில் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே புறப்படமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். இந்த சிறிய செயல் நம்முடைய கூட்டுமுயற்சிக்கு ஒரு தொடக்கமாக இருக்கட்டும். இன்றைய நாள், கடல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான பரப்புரையை விரிவுபடுத்துகிறோம். மேலும், தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களிலும் ‘கைவிடப்பட்ட’ மீன் வலைகளை அகற்றும் முயற்சியும் தொடங்கப்படுகிறது. ‘தூய்மை இயக்கம் இது குப்பை மேட்டர் இல்லை’ என்று ஒரு இயக்கத்தை தொடங்கப் போகிறோம் என்று சமூக ஊடகங்களில் அறிவித்திருக்கிறோம்.
இந்தியா ஏன் அமெரிக்கா போன்று இல்லை? ஜப்பான் போன்று இல்லை? ஐரோப்பா போன்று இல்லை? என்று நிறைய சினிமாவில் கேள்வி கேட்பார்கள். அது போன்று ஆகவேண்டும் என்றால், அந்த மக்களுக்கு இருக்கக்கூடிய சுய ஒழுக்கம் நமக்கும் இருக்க வேண்டாமா? அதற்கான முதல்படிதான் குப்பைகளை தரம் பிரித்து போடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற இந்த தூய்மை இயக்கம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசு அறிவிக்கின்ற அறிமுகப்படுத்தும் திட்டங்களை உங்கள் சொந்த திட்டமாக நினைத்து நீங்கள் (மக்கள்) பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். நம்முடைய அரசை பொறுத்தவரை தீர்வுக்காக காத்திருப்பவர்கள் இல்லை. தீர்வை உருவாக்குகின்றவர்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டும் என்றால், நாம் தான் தீர்வு. திராவிட மாடல் அரசு, சமூக நீதிக்கான அரசு மட்டுமல்ல, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும். அதற்கு மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.