இடதுசாரி அரசியலால் எழுச்சி பெற்ற பாமக, தற்போது வலதுசாரி அரசியலுக்கு முழுமையாக மாறிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாமகவில் உட்கட்சி நடந்து வருவதாக கூறிய அவர், தற்போது பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் அம்பலமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. பாமகவை கையில் எடுக்க அன்புமணி தயாராகிவிட்ட நிலையில், வன்னியர் சங்க ஆதரவு ராமதாஸ் பக்கமே இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் உடனடியாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்தார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்திருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக விரைவில் இணையும் என்று பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை பாஜக மூலமாக அன்புமணி செய்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையில் நடப்பது உட்கட்சி விவகாரம், அவர்களின் குடும்ப விவகாரம். அதில் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஆனால் இன்று நடுவராக சென்றிருப்பவர் குருமூர்த்தி. பாமகவின் எழுச்சிக்கு காரணம் பாமக தொடக்க காலத்தில் இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆதரவை பெற்று வளர்ந்தது. ஆனால் இன்று வலதுசாரி அரசியலுக்கு முழுமையாக போய்விட்டார்கள் என்பதை உணர்த்தக் கூடிய வகையில் பஞ்சாயத்தார்களின் முயற்சி வெளிப்படுத்துகிறது. பாமக இடதுசாரி அரசியலால்தான் எழுச்சி பெற்றது என்பதை ஜனநாயக சக்திகள் அறிவார்கள். ஆனால் வலதுசாரி கட்சியாக மாறிவிட்டது. இப்போது பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் வெளிப்படையாக அம்பலமாகி இருக்கிறார்கள். அது தமிழ் மக்களுக்கு வெளிச்சமாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.