சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பேராசிரியர்களும் ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வித் துறையை கேலிக் கூத்தாக்கியிருக்கும் அவல நிலையை உருவாக்கியிருப்பதுதான் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின் சாதனை.
திமுக ஆட்சியில், வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் கடன் சுமை, ரூ. 9 லட்சம் கோடிக்கும் அதிகமாகிவிட்டது. ஆனால், அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?
உடனடியாக, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் மீண்டும் இது போன்ற நிலையில், ஆசிரிய பெருமக்களை நிறுத்த வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.