தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்களை அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்றுமாறு உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை மாற்றியமைக்கவும், மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு நேற்று விசாரித்தது. மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில், இந்த வழக்கில் அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வழக்கில் தலைமைச் செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.