தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன்.24ம் தேதி முடிவடைகிறது. இதற்காக ஜூன்.19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக வேட்பாளர்கள் 3 பேர் மற்றும் அதன் கூட்டணியிலிருந்து கமல்ஹாசன் என 4 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் நால்வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த அன்புமணி ராமதாஸ்(பாமக), என். சந்திரசேகரன் (அதிமுக), எம்.சண்முகம், முகமது அப்துல்லா, வில்சன் மற்றும் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் ஜூன்.24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி இந்த முறை வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாகத்தான் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கடந்த முறை எம்பியாக இருந்த பி.வில்சனுக்கு இந்த முறை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. புதியதாக எஸ்.ஆர். சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட் வழங்கப்பட்டிருந்தது. அக்கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். நால்வரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து கமல்ஹாசனும் முதலமைச்சர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக வேட்பாளர்கள் மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ம.தனபால் ஆகியோா் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதிமுக வேட்பாளர்கள், தலைமை செயலகத்தில் உள்ள பேரவை அலுவலகத்தில் இன்று மதியம் 12.45 மணியளவில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள்.
மொத்தமுள்ள எம்எல்ஏக்களின் தொகையை, காலி இடங்கள்+1 என்கிற எண்ணுடன் வகுக்க வேண்டும். அதாவது மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 234. காலியிடங்கள் மொத்தம் 6. இத்துடன் 1 என்கிற எண்ணை கூட்ட வேண்டும். 7 வரும் இதனை 234 உடன் வகுத்தால் 33.42 என்கிற எண் கிடைக்கும். அத்துடன் ஒன்றை கூட்ட வேண்டும். 34.42. இதை ரவுண்ட் செய்தால் 34. ஆக ஒரு எம்பிக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்ந்தெடுக்க தேவையான பலம் இதுதான்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு என 159 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இதன் மூலம் 4 எம்பிக்களை தேர்ந்தெடுக்க முடியும். அதேபோல அதிமுகவுக்கு 66+4 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இதை வைத்து 2 எம்பிக்களை தேர்ந்தெடுக்க முடியும்.