கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை 3 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், கடந்த 2015-ம் ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் யுவராஜ் உள்பட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மற்ற இருவரின் தண்டனையைக் குறைத்தது.
மதுரை நீதிமன்றத்தில் நடந்த இந்த கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நியமிக்கப்பட்டிருந்தார். உயர் நீதிமன்றத்திலும் அரசு தரப்பில் வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜராகியதற்கான வழக்கறிஞர் கட்டணத்தை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை என்பதால் அந்த கட்டணத்தை வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மோகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் மோகனின் கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் தொகை வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, 3 வாரங்களில் மோகனுக்கான கட்டணத்தை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவி்ட்டார். அத்துடன் கட்டணம் வழங்கப்பட்டது தொடர்பாக ஜூன் 30-க்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.