கொங்கு பகுதியில் நடக்கும் கொலைகளுக்கு பின்னணியில் ரியல் எஸ்டேட் குற்றவாளிகள்: காயத்ரி ரகுராம்!

கொங்கு பகுதியில் நடக்கும் கொலைகளுக்கு பின்னணியில் ரியல் எஸ்டேட் குற்றவாளிகள் இருக்கிறார்களா? எனவும், தொழில் மயமாக்கல் முயற்சிகளுக்காக முன்பே திட்டமிடப்பட்ட சதியா? என கேள்வி எழுப்பி உள்ளார் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம்.

தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டல பகுதிகளில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து பணம் நகை கொள்ளை அடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடத்தில் மூன்று பேரும், சிவகிரியில் இரண்டு பேரும் கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகள் என சிலரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு, அவர்கள்தான் இரு சம்பவங்களில் ஈடுபட்டனர் என்றும் காவல்துறை விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குளத்துப்பாளையத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் சாமியாத்தாள் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்ததாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பொய் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளார்களா? என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் முதியவர்களை குறி வைத்து கொலை செய்வதற்கு பின்னணியில் ரியல் எஸ்டேட் குற்றவாளிகள் இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் அதிமுக மகளிர் அணி மாநில துணை செயலாளரான காயத்ரி ரகுராம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

கொங்கு பகுதியில் அண்மைக் காலமாக தொடர் முறையில் முதியோர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பெரும்பாலும், இவர்கள் வயதான பெற்றோர்கள், தனிமையில் வாழும் முதியவர்கள். இச்சம்பவங்கள் சாதாரண கொலைகளாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இது ஒருவகை நில அபகரிப்பு சூழ்ச்சியா? அவர்களது சொத்துக்களை கைப்பற்ற சில சக்திவாய்ந்த நபர்கள் திட்டமிட்டு செயற்படுகிறார்களா? இது ஒரு வகையான ரியல் எஸ்டேட் குற்றவாளிகளின் வேலைப்பாடா? இங்கு நடைபெறும் தொழில்மயமாக்கல் முயற்சிகளுக்காக முன்பே திட்டமிடப்பட்ட திட்டமா? இந்த சந்தேகங்கள் மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன.

அதைவிட மிக முக்கியமாக, இந்த கொலைகளைத் தொடர்ந்து நாம் ஏன் சமூகமாக கவனிக்கவில்லை? ஏன் அரசாங்கம் (திமுக அரசு) இதைப் பற்றி மௌனமாக இருக்கிறது? என்ன காரணத்தால் உண்மையான விசாரணை நடைபெறுவதில்லை? இது போன்ற சம்பவங்களில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியவர்கள் பாதுகாப்பு என்பது ஒரு நாகரிக சமூகத்தின் அடிப்படை ஒப்புதல். இத்தகைய தொடர்ச்சியான கொலைகள் நமது மனிதநேயம், சட்டம் மற்றும் நீதிக்கே ஒரு சவாலாக உள்ளது. இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணத்தை தமிழக அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கொங்கு மண்டலத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முதியவர்கள் கொலை செய்யப்படுவதற்கான உண்மையான காரணத்தை சில மத்திய துப்பறியும் நிறுவனங்கள் கண்டுபிடிக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.