தமிழ்நாட்டை டெல்லியை போல் ஆக்கிவிடலாம் என்று முயற்சித்து பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தலைநகர் டெல்லியில் நடந்ததுபோல் தமிழ்நாட்டிலும் ஆட்சிமாற்றம் நிகழும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமித்ஷாவின் பேச்சு குறித்து மதுரையில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
ஆட்சிமாற்றம் என்பது அமித்ஷாவின் கனவாக இருக்கலாம். டெல்லியில் விளையாடியதுபோல் தமிழ்நாட்டில் விளையாட முடியாது. வட இந்தியா வேறு, தென் இந்தியா வேறு. டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு. தமிழ்நாடு சமூக நீதிக்கான மண் என்பது இந்தியா அறிந்த உண்மை.
ஆனாலும் தமிழ்நாட்டை டெல்லியை போல், மராட்டிய மாநிலத்தை போல் ஆக்கிவிடலாம் என்று அவர்கள் முயற்சித்து பார்க்கிறார்கள். ஆனால் அதை இந்த மண்ணில் அரசியல் முதிர்ச்சி அடைந்த தமிழ்மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.