காலை உணவுத் திட்டம், நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம்: மு.க.ஸ்டாலின்!

காலை உணவுத் திட்டம், நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக இருந்ததாக அரசு பள்ளிஆசிரியர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிர்வினையாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், “உங்கள் பகுதியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா?” என்று நான் கேட்பது வழக்கம்! அந்த வகையில், ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன்.

காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.