98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை: பெ.சண்முகம்!

98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறுகிறது என்றால் கணக்கில் பிரச்னை உள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ .சண்முகம் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் ஜூன் 20 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம் செய்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை அனகாபுத்தூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் கூறுகையில், ‘’ 98.5 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், நிறைவேற்றிவிட்டதாக திமுக கூறுகிறது என்றால் கணக்கில் பிரச்னை உள்ளது. அதேபோல், மக்களுக்கு குடிமனை பட்டா வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. பிறகு ஏன் அனகாபுத்தூரில் வெளியேற்ற நடவடிக்கையினை அரசு எடுக்கிறது’’ என வேதனைத் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் ‘தமிழ்நாடு அரசே, வாக்குறுதி அளித்தபடி அரசு ஆட்டோ செயலியை உருவாக்கிடு’ என்றும், ‘ஆசிரியர், அரசு ஊழியர், மருத்துவர், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறையினருக்கு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்’’ என பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது:-

பா.ஜ.க. மற்றும் அதிமுக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக்கொண்டு, அந்தக் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளில், அந்தக் கூட்டணியின் தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். மதச்சார்பான கூட்டணியைத் தோற்கடிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. அதிமுக – பாஜக கூட்டணியைத் தோற்கடிக்கும் வலிமை, இன்றையச் சூழலில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்குத்தான் இருக்கிறது. ஆகவே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் தான், 2026 தேர்தலைச் சந்திப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருக்கிறது.

ஏனென்றால், அதனை தோற்கடிப்பதற்கான வலிமை யாருக்கு இருக்கிறது என்பது முக்கியமான கேள்வி.
இத்தகைய சூழலில் மதச்சார்பான அந்த அணியைத் தோற்கடிப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறது. பாஜக – அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்பது என்பது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம். அதற்கு ஏற்ப எங்கள் அரசியல் அணுகுமுறை இருக்கும்.

உதாரணத்திற்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாங்கள் கடந்தமுறை போட்டியிடவில்லை. நிறைய தொழிலாளி வர்க்கம் நிறைந்திருக்கும் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம். ஒரு கட்டத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அங்கு இருந்திருக்கிறார்கள். அதேபோல், கோவை, திருப்பூர் போன்ற தொழிலாளர்கள் நிறைந்து இருக்கிற, அந்த மாவட்டங்களில் எல்லாம் நாங்கள் கடந்த முறை நாங்கள் போட்டியிடவில்லை.

இந்த 2021 தேர்தலில் பெற்ற வாக்குகளை வைத்துக்கொண்டு, அதில் வென்றதை வைத்துக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினை மதிப்பிடுவது சரியான மதிப்பீடாக இருக்காது. 2026 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும். அதேநேரத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும். கூடுதலான உறுப்பினர்கள், சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என நாங்கள் தீர்மானித்து இருக்கிறோம்.

அதற்கான முறையில் எங்களது அணுகுமுறை இருக்கும். எல்லாத்தோழமைக் கட்சிகளுமே கூடுதலான இடங்களில் போட்டியிடவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். நாங்கள் குறைத்துக்கொள்கிறோம் எனச் சொல்வார்களா?. எல்லோருமே அதைத்தான் கேட்பார்கள். அதற்கேற்ப திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியின் தலைமை என்கிற வகையில், எங்களது கோரிக்கைகளை, பேச்சுவார்த்தையின்போது பரிசீலித்து, பொருத்தமான முடிவினை எடுக்க வேண்டும். பாஜக – அதிமுக கூட்டணியை நாங்கள் தோற்கடிக்க வேண்டும் என நாங்கள் எடுத்த தீர்மானம் எவ்வளவு முக்கியமானதோ, சி.பி.எம். கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவது என்பதும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.