மோடியை போல பொய் சொல்லும் பிரதமரை நான் பார்த்ததே இல்லை: மல்லிகார்ஜுன கார்கே!

“கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால், இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் பிரதமரை நான் பார்த்ததில்லை. அவர் எல்லாவற்றுக்கும் பொய் சொல்கிறார். அவர் தனது தவறை ஒப்புக்கொள்வதே இல்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவின் கலபுராகியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகின்றன. இதில், 33 தவறுகள் நடந்துள்ளன. உங்களுக்குத் தெரியும், நான் நாடாளுமன்றத்திலும் இது குறித்துப் பேசி வருகிறேன். இவ்வளவு பொய் சொல்லி, இவ்வளவு தவறுகளைச் செய்து, மக்களை சிக்க வைத்து, இளைஞர்களை ஏமாற்றி, ஏழைகளை சிக்க வைத்து வாக்குகளைப் பெறும் பிரதமரை நான் பார்த்ததில்லை. நான் 65 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால், அவரைப் போல யாரும் இருந்ததில்லை.

பிரதமர் எல்லாவற்றுக்கும் பொய் சொல்கிறார். அவர் சொல்லும் எதையும் செயல்படுத்துவதில்லை. மேலும், கேள்வி கேட்டால் அதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக இருந்தாலும் சரி, இதுபோன்ற பல விஷயங்கள் உள்ளன. எதற்கும் அவர் பதில் சொல்வதில்லை. பொய் சொல்லிவிட்டதாகவோ, தவறு செய்துவிட்டதாகவோ அவர் ஒருபோதும் மக்களிடம் ஒப்புக்கொண்டதில்லை, அதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்டதில்லை. அவர் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல விஷயங்களைச் சொல்லி வருகிறார். இப்போது 11 ஆண்டுகள் ஆகிவிட்டன.

உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில் திட்டம் உட்பட முந்தைய (காங்கிரஸ்) அரசின் பங்களிப்பு பற்றி அவர் எதுவும் சொல்வதில்லை. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ​காஷ்மீருக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அதிகபட்ச நிதியை வழங்கினேன். நாங்கள் என்ன செய்திருந்தோமோ, அதை அவர் முன்னெடுத்துச் சென்று திறந்து வைத்தார்.

மோடி எப்போதும் ஜனநாயகம் – ஜனநாயகம் என்று கூறுகிறார். சுதந்திரத்திற்குப் பிறகு, எந்த பிரதமரும் துணை சபாநாயகர் பதவியை காலியாக வைத்திருக்கவில்லை. ஆனால் மோடி அந்தப் பதவியை காலியாக வைத்துள்ளார். மோடியின் இந்த செயல் சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது. அவர் ஒரு சிறிய துணை சபாநாயகர் பதவியைக் கூட (பிரதான எதிர்க்கட்சிக்கு) கொடுக்க விரும்பவில்லை. இது அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த நாட்டில் அரசு அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.

கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல், மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். நிலைமை குறித்து நான் அவர்களிடம் தெரிவித்தேன். ராகுல் காந்திக்கும் விளக்கப்பட்டது. பாஜக கோருவதை வைத்து, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிலர் கோருகின்றனர். கும்பமேளாவில் பலர் உயிரிழந்தனர். அதற்காக அப்போது யாரும் ராஜினாமா செய்யக் கோரவில்லை. இந்தச் சம்பவம் தற்செயலானது, அதற்காக நாங்கள் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.