வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

விவசாயிகளால்தான் இந்த மண்ணும், மக்களும் மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு உணவுப் பொருள்கள் கிடைத்து உடல் வலிமையோடு வாழ்கிறார்கள். “தமிழ்நாட்டின் வேளாண் பெருமக்கள் எல்லோரும் வாழ்வாங்கு வாழ்க” என்று இந்த ஈரோடு மண்ணிலிருந்து ஈர உணர்வோடு நான் வாழ்த்துகிறேன்.

இந்தத் துறையை ஒரு விவசாயிக்கே உரிய அக்கறையோடும், பொறுப்போடும் நடத்திக்கொண்டு வருகிறார் யார்? வேங்கையின் மைந்தன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்! இந்த கண்காட்சி கருத்தரங்கம் நடத்துவதற்கு இந்த ஈரோடு மாவட்டத்தை ஏன் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், ஈரோடு வேளாண்மையில் வளர்ச்சி பெற்ற பல முன்னோடி விவசாயிகளைக் கொண்ட மாவட்டம்! இந்த மாவட்டம்! குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாவட்ட மொத்த வேளாண் உற்பத்தியில் 12 ஆயிரத்து 21 கோடி ரூபாய் என்ற அளவில் மாநிலத்தில் எட்டாவது இடம்! காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி என்று முக்கிய பாசன கால்வாய்கள் இருக்கிறது! இந்தியாவின் ‘மஞ்சள் மாநகரம்’ இந்த ஈரோடு! அதனால், இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்து சரியான முடிவு எடுத்திருக்கிறார்கள்!

ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல் வேலையாக வேளாண்மைத் துறை என்று சொல்லாமல், உழவர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று, ‘வேளாண்மை – உழவர் நலத்துறை’ என்று பெயரை மாற்றினோம்! அந்த மாற்றத்திற்கேற்ப உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களையும் வகுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்! அதனால்தான், தமிழ்நாட்டு வரலாற்றில், முதல்முறையாக வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஆரம்பித்தோம்!

அப்படி ஐந்து வேளாண்மைத் துறை பட்ஜெட் மூலமாக தனிக் கவனம் செலுத்தியதால் உண்டாகி இருக்கக்கூடிய பயன்களை சில எடுத்துக்காட்டுகளை சொல்ல வேண்டும் என்றால்,

கடந்த 4 ஆண்டுகளில், உணவு தானிய உற்பத்தியில் 458 லட்சம் மெட்ரிக் டன் எட்டியிருக்கிறோம்!

2020-21-ஆம் ஆண்டில், ஹெக்டேருக்கு 2 ஆயிரத்து 235 கிலோவாக இருந்த உணவு தானிய பயிர்களின் உற்பத்தித் திறன் 2024-25-ஆம் ஆண்டில், 2 ஆயிரத்து 871 கிலோவாக அதிகரித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, கூட்டுறவுத்துறை மூலம் 62 ஆயிரத்து 352 கோடி ரூபாய் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடனாக 81 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு 26 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டு, இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரம் இணைப்புகள் – 2 ஆயிரத்து 184 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன். இலவச மின்சாரத்திற்கு மட்டும் இதுவரை மொத்தம் 26 ஆயிரத்து 223 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கூடுதலாக, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 105 ரூபாயும், பிற இரகங்களுக்கு 130 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான ஒரு டன்னுக்கு 3 ஆயிரத்து 151 ரூபாய்க்கு மேல், 349 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்குகிறோம். இப்படி விவசாயிகளுக்கு பார்த்துப் பார்த்து செய்வதால்தான், வேளாண்மையும் பெருகியிருக்கிறது! உழவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! இருக்கிறீர்களா! இல்லையா! சொல்லுங்கள்…

அகில இந்திய அளவில் பயிர் உற்பத்தித் திறனில், தமிழ்நாடு பெற்றுள்ள இடங்களை சொல்ல வேண்டும் என்றால்..

சிறுதானியங்கள், கேழ்வரகு, எள் மற்றும் துவரையில் முதலிடம்!

மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாவது இடம்!

குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம்! இப்படி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றுதான் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தினோம்! நகரங்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமமும் அதற்கு இணையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைத்து மொத்தம் இருக்கும் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இதில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற திட்டத்தை கடந்த ஆண்டு செயல்படுத்தினோம். தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விளைவிப்பதை ஊக்கப்படுத்தும் இந்த திட்டத்தில் 20 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, தோளில் துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் கிடையாது… உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால், முதல் ஆளாக துணை நிற்பவர்கள் நாங்கள்!

கடந்த 4 ஆண்டுகளில், 21 லட்சம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியிருக்கிறோம்! பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் 32 இலட்சம் விவசாயிகளுக்கு
5 ஆயிரத்து 720 கோடி ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, ஏராளமான சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அதையெல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்..

மதுரை மல்லிகைக்கான இயக்கம்

பலா இயக்கம்

முருங்கை இயக்கம்

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்

பனை மேம்பாட்டு இயக்கம்

தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி தொகுப்பு

கறிவேப்பிலைத் தொகுப்பு

தென்னை வேர்வாடல் நோய்மீட்புத் திட்டம்

மிளகாய் மண்டலம் – என்று ஏராளமான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்!

அத்துடன், வேளாண் இயந்திரங்கள் பெறுவதற்கு மானியம் – வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க மானியம் – உழவர் செயலியில் இ-வாடகை சேவை என்று நம்முடைய அரசின் முன்னெடுப்புகளையும் திட்டங்களையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்!

இந்த வரிசையில், உழைப்புக்கான பயனை உழவர்களே பெற வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டு, கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட 125 உழவர் சந்தைகளை புதுப்பித்து, 14 புதிய உழவர் சந்தைகளையும் உருவாக்கியிருக்கிறோம்!

இந்த ஈரோடு மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களின் நன்மைக்காக சில முக்கியமான திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் சொல்ல வேண்டும் என்றால், ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 2020-21-ஆம் ஆண்டை விட 25 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக 2024-25-ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த மேற்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டு ஈரோடு – திருப்பூர் – கோவை மாவட்டங்களில் இருக்கும் ஆயிரத்து 45 ஏரிகள் மற்றும் குளங்கள் வளம் பெற்றிருக்கிறது.

கடைமடைக்கும் பாசன நீர் கிடைக்கும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, தேவையான புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய்கள் 514 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

8 ஆயிரத்து 579 விவசாயிகளுக்கு இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

பவானிசாகரில் உத்தமத் தியாகி ஈஸ்வரன் அவர்களுக்கு திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில், ஆயிரம் ரூபாயாக இருந்த முதியோர் ஓய்வூதிய தொகை 2023-ஆம் ஆண்டு முதல் ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம். அதில், இந்த மாவட்டத்தில் மட்டும் 6 கோடியே 61 லட்சம் ரூபாய் 5 ஆயிரத்து 696 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வளவும் ஈரோடு மாவட்ட விவசாய மக்களுக்காக செய்திருக்கிறோம். இனியும் செய்து தர இருக்கிறோம்.

அந்த வரிசையில்தான் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வேளாண் விளைபொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து தகவல்களையும் நீங்கள் இங்கு தெரிந்துக்கொள்ளலாம். உழவுத் தொழிலுக்கும் வேளாண்மை சார்ந்து இருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும், நாம் எல்லோரும் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சி வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியான பயனுள்ள நிகழ்வுகள் அனைத்து மண்டலங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வேளாண்மை உழவர் நலத்துறையை நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்! அதேபோல், விவசாயிகளும், பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!

உழவு என்பது தொழில் மட்டுமல்ல; அது நம்முடைய பண்பாடு! நிலத்தை ஐந்திணையாக பிரித்து வாழ்வியல் வகுத்த இனம் நம்முடைய தமிழினம். அந்த நிலத்தை எல்லா வகையிலும் நாம் வளப்படுத்தி உயர்த்த வேண்டும். வளமான நிலங்களிலும், பயிர்களுக்கு நடுவில் களைகள் முளைக்கும் என்பது விவசாயிகளான உங்களுக்கு நன்றாகத் தெரியும்!

அப்படிப்பட்ட களையாக தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி இருந்தது! எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது! ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் எப்படியெல்லாம் போராடினீர்கள் என்று சிறிது நினைத்துப் பாருங்கள்… இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கிறது! கடந்த ஆட்சியில், விவசாயிகளின் தற்கொலை அதிகமானது! உழவர்களின் உரிமையைப் பறிக்க முயன்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தில்லியில் வெய்யிலிலும், மழையிலும் விவசாயிகள் போராடி அடக்குமுறையை எதிர்கொண்டபோது, கூச்சமே இல்லாமல் அந்த சட்டங்களை ஆதரித்துப் பேசி, பச்சை துரோகம் செய்தவர்கள் அவர்கள். அதனால் தான் நீங்கள் தோற்கடித்தீர்கள்!

வேளாண் பெருங்குடி மக்களான உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அதுபோன்ற களைகள், நாட்டிலிருந்து மொத்தமாக களையப்பட வேண்டும். உழவர் பெருங்குடி மக்களான உங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் வர இருக்கிறது. மீண்டும் நம்முடைய திராவிட மாடல் 2.O ஆட்சிதான் அமையும்! அதற்கு, உழவர்களைக் காக்கும் இந்த அரசுக்கு உழவர் பெருமக்கள் அனைவரும் உற்ற துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.