எடப்பாடி கையெழுத்து போட்ட கடிதத்தை நாகரிகம் கருதி நாங்கள் வெளியிடவில்லை: பிரேமலதா!

“மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதித் தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் உள்ளோம்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, 2026 தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. அதிமுகவிடம் தேமுதிக ராஜ்யசபா சீட் கேட்ட நிலையில், 2026ல் சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் 2026 சட்டசபை தேர்தலிலும் தேமுதிக கூட்டணி தொடருமா என்ற விவாதங்கள் நடக்கின்றன. எனினும், தேமுதிக கூட்டணியில் தொடர்வதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தோ பட்டும் படாமல் பேசி வருகிறார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா, “தமிழ்நாட்டில் தனித்து தேர்தல் களத்தில் நிற்க முடியும் என நிரூபித்தவர் கேப்டன். அதை முன்னுதாரணமாகக் கொண்டு சீமான் செயல்பட்டு வருகிறார். இனிமேல் தான் விஜய் அவரது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். தேமுதிக தனித்துப் போட்டியா என்பது பற்றி இப்போது பதில் கூறமுடியாது. இந்தக் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். அப்படியான சந்தர்ப்பம் வந்தால் தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிக தயங்காது. எத்தனையோ தேர்தல்களை, இடைத்தேர்தல்களை தனித்துக் களம் கண்டவர்கள் நாங்கள்.

2026ல் ராஜ்யசபா சீட்டை தருவதாக அவர்கள் தான் சொல்லி இருக்கிறார்கள். 2024 லோக்சபா தேர்தலின்போதே 5 லோக்சபா சீட், ஒரு ராஜ்யசபா சீட் என்பது ஒப்பந்தம் ஆன ஒன்றுதான், ஆனால் வருடம் குறிப்பிடப்படவில்லை. நாங்கள் வருடம் குறிப்பிட வேண்டும் எனக் கேட்டபோது, அப்படி வருடம் குறிப்பிடும் வழக்கம் இல்லை என எடப்பாடி பழனிசாமி சொன்னார். எழுத்துப்பூர்வமாக தருவதை விட, எனது வாக்கு தான் முக்கியம் என்ற உறுதியையும் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இப்போது, அடுத்த ஆண்டு சீட் தருவதாக சொல்லி இருக்கிறார். பொறுத்தார் பூமி ஆள்வார், நிச்சயமாக அதற்குரிய காலம் வரும். நாகரிகம் கருதி வெளியிடவில்லை. நாங்கள் ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை, நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என பேசியது தேமுதிகவின் கடைக்கோடி தொண்டர் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபற்றி நாங்கள் கேட்டதும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடனே லைனில் வந்து எடப்பாடி ஏதோ டென்ஷனில் சொல்லிவிட்டார் எனக் கூறினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.