பச்சைத் துண்டு அணிந்தால் போலி விவசாயியா?: பிஆர்.பாண்டியன் கண்டனம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் பேசும்போது, “நாங்கள் ஒன்றும் பச்சைத் துண்டு போட்ட போலி விவசாயிகள் அல்ல” என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன், “பச்சைத் துண்டுபோட்ட போலி விவசாயி யார்-?” “பச்சைத் துண்டுபோட்டால் போலி விவசாயியா?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மன்னார்குடியில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களிடம் பிஆர்.பாண்டியன் கூறியதாவது:-

முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் நிதியை பயன்படுத்தி, ஈரோட்டில் விவசாயிகள் கருத்தரங்கம், கண்காட்சி என்கிற பெயரில் போலி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் பச்சைத்துண்டு விவசாயிகள் மீது புழுதி வாரி தூற்றியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் அலங்கோலத்தால் விவசாயிகள் படும் துன்பங்களை பட்டியலிட்டு வெளி உலகுக்கு எடுத்துரைத்தால் போலி பட்டம் கொடுக்க முயற்சிப்பீர்களா?

உங்கள் பட்டம் எங்களுக்கு தேவையில்லை. விவசாயிகளுக்கு தனது ஆட்சிகாலத்தில் செய்துள்ளதாக ஈரோட்டில் பட்டியலை வாசித்துள்ள ஸ்டாலின், 2021-க்கு முந்தைய ஆட்சியில் காவிரி டெல்டாவில் பேரிடரால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு விவசாயிகள் பெற்ற தொகை பட்டியலையும், அப்போது வழங்கப்பட்ட இடுபொருட்கள் பட்டியலையும் தங்கள் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட இழப்பீட்டுக்கான பட்டியலையும் ஒப்பிட்டு வெளியிட தயாரா?.

2021 முதல் குறுவை காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிட்டுள்ளீர்கள். பயிர் காப்பீட்டு பிரீமியத்தை தனியார் காப்பீட்டு நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்து வசூலிக்க வைக்கும் வேகத்தை, உரிய இழப்பீடு பெற்று தருவதற்கு தங்களது ஆட்சி காட்டவில்லை. விவசாயிகளின் நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென்ற திட்டத்தை இந்தியாவிலலேயே முதன்முதலில் கொண்டுவந்தவர் கருணாநிதி, ஆனால் அந்த கொள்முதலை தனியாருக்கு தாரை வார்த்து விவசாயிக்கு மட்டுமல்ல கருணாநிதிக்கே துரோகம் செய்துள்ளீர்கள். அந்த தனியாருக்கோ எந்தவொரு முன் அனுபவமோ, கொள்முதலுக்கான கட்டமைப்போ அதற்கான வங்கி பணி பரிவர்த்தனைக்கான தகுதியோ இல்லை. இதன்காரணமாக செங்கல்பட்டு, ராணிப்பேட்டை திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ.800 கோடி அளவில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதற்காக விவசாயிகள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் சொல்லவில்லை.

தனியார் கொள்முதல் குறித்த கணக்கு விபரங்கள் கூட இல்லாமல், தங்களது மாவட்டங்களில் தனியார் நெல்கொள்முதலை அனுமதித்த மாவட்ட ஆட்சியர்கள் பரிதவிக்கிறார்கள். விவசாயிகள் பணம் வரவாகமல் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் தீர்வு சொல்லவில்லை. இந்த நிலையில்தான், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக கொள்முதல் செய்த நெல்லுக்கு தமிழக அரசு பொறுப்பேற்று உடனடியாக உரிய தொகையை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.

தனியார் கொள்முதலை ரத்து செய்து அரசே பொறுப்பேற்று கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியது பச்சைத்துண்டு அணிந்த விவசாயிகள்தான். வரும் ஜூன் 17ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளோம். இதுபோன்று விவசாய விரோத கொள்கைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்வு காண்பதற்காக போராடும் விவசாயிகளை பச்சைத் துண்டு போட்ட போலி விவசாயிகள் என்று முதல்வர் கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.