மாநிலங்களவை உறுப்பினர்களாக மநீம தலைவர் கமல்ஹாசன், திமுகவின் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுகவின் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்கான சான்றிதழையும் பெற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர்களில் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியம், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இணை செயலர் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியிட்டனர்.
தொடர்ந்து, கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஜூன் 10-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள், எம்எல்ஏக்கள் முன்மொழிவு இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டன. திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 பேரது மனுக்கள் ஏற்கப்பட்டன. தொடர்ந்து, இன்று (ஜூன் 12) மாலை 3 மணிவரை மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் போட்டியிடாத நிலையில், வெற்றி பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை, தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியம் வெளியிட்டார்.
இதுகுறித்து, சுப்பிரமணியம் கூறியதாவது:-
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்களாக உள்ள அன்புமணி ராமதாஸ், மு.சண்முகம், என்.சந்திரசேகரன், மு. முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியார் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழக சட்டப்பேரவையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 17 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் ஆகியோர் தலா 2 வேட்பு மனுக்களும், அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் தலா 2 வேட்பு மனுக்கள், சுயேச்சை வேட்பாளர்களான அக்னி ஆழ்வார், கண்டே சயன்னா, ரே. கந்தசாமி, மு.சுப்பிரமணியன், குபத்மராஜ் து.கு.மேஷக் கிருபாகரன், கே.பி.எம். ராஜா ஆகியோர் தலைா ஒரு வேட்பு மனுக்களை அளித்திருந்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனை கடந்த ஜூன் 10ம் தேதி நடைபெற்றது. இன்று மாலை மூன்று மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தவர்கள் யாரும் மனுக்களை திரும்பப் பெறவில்லை.
நிரப்பப்பட வேண்டிய 6 காலியிடங்கள் எண்ணிக்கையும் சட்டப்படி செல்லத்தக்க வேட்பு மனுக்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், தேர்தல் விதிகளின் படியும் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் பி.வில்சன், ராஜாத்தி , எஸ்ஆர் சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோர் போட்டியின்றி முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் அறிவித்தார்.
இதையடுத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியத்திடம் இருந்து, திமுக சார்பில் போட்டியிட்ட கமல்ஹாசன், பி.வில்சன், சிவலிங்கம் மற்றும் ராசாத்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் முன்னிலையில், அதிமுக வேட்பாளர்கள் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் தங்கள் வெற்றிச்சான்றிழை பெற்றனர். புதிதாக மாநிலங்களவைக்கு தேர்வானவர்கள், ஏற்கெனவே தேர்வானவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், மாநிலங்களவையில் உறுதிமொழி ஏற்று எம்.பி-களாக பணியாற்றுவார்கள்.