நாமக்கல்: முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:-
சீர்மிகு நகரத் திட்டத்தைத்தான் சிங்காரச் சென்னை என்று திமுகவினர் கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும், மாநில அரசு செய்ததுபோல காட்டுவது திமுகவின் வேலை.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை முருகப் பெருமான் ஓட ஓட விரட்டப் போகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமிக்க வலிமையான கூட்டணியாக உள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திமுக கூட்டணி கட்சியினர் மாற்றி மாற்றிப் பேசுகின்றனர். மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்படும்.
திமுக கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வெளியேறலாம். மக்களைப் பாதுகாக்க, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ, அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு, கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கீழடி மட்டுமல்ல, ஆதிச்சநல்லூர் அகழாய்வையும் மத்திய அரசுதான் மேற்கொள்கிறது. இறுதிக்கட்ட முடிவுக்கு முன்னர், அதற்கு என்னென்ன தேவையோ அது கேட்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.