குழந்தைகள் நல குழுவிடம் விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் புகார்!

நடிகர் ஜோசப் விஜய் மீது விசாரணை செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சிவமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பான அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடிகர் ஜோசப் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு, ஜூன் 28-ம் தேதி திருவான்மியூரில் நடந்த பள்ளி பொது தேர்வு முடிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், மாணவிகளை அழைத்து அவர்களை அணைப்பதும், அனுமதியின்றி தொடுவது மற்றும் முறைகேடாக நடந்தது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை பல கோடி மக்கள் பார்த்து பெண் குழந்தைகளை தொடுவது தவறில்லை என்று கருதி தொடக்கூடும்.

இதனால் சமுதாயத்தில் இளைஞர்களும், மற்றவர்களும் நடிகர் ஜோசப் விஜய் செய்கையை பார்த்து அதேபோல் செய்ய முற்படுவார்கள். அதனால் சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கம் மற்றும் காலாசார சீர்கேடு ஏற்படுவது மட்டும் இல்லாமல் சமுதாயத்தில் தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தது என்றால், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது மிகபெரிய கேள்வி குறி ஆகிவிடும்.

ஆதலால் இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் நடிகர் ஜோசப் விஜய் மீது விசாரணை செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.