2026-ல் கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். நான் பாஜக ஆட்சி என்று தான் சொல்வேன் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் படி இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. வருகின்ற காலத்தில் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனின் அறிவுறுத்தலின் படி மற்ற பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும்.
மத்திய பாஜக அரசு ஒவ்வொரு தேர்தலின் போதும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. 2014, 2019 ஆம் ஆண்டு நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் எடுத்து படிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பல கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணங்கள் மீட்கப்பட்டுள்ளது, பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேபோல் மகளிருக்கு பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது, சட்டப்பிரிவு 370 அகற்றப்பட்டு இந்தியாவோடு காஷ்மீர் இணைக்கப்பட்டது, ஆயுஷ்மான் பாரத் திட்டம், தூய்மை பாரத திட்டம், பயிர் கடன், பிரதமரின் கிசான் உதவித்திட்டம், ஜந்தன் யோசனா, முத்ரா கடன் உதவி, ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத திட்டம், உஜ்வாலா திட்டம், ஆவாஸ் ஜோசனா, பயிர் காப்பீடு திட்டம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவைக்கு விரைவில் மெட்ரோ வர வேண்டும் என்பது ஆசை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2014 ஐந்து நகரங்களில் மட்டும் மெட்ரோ இருந்தது. தற்போது 23 நகரங்களில் மெட்ரோ வந்திருக்கிறது.
தமிழ்நாடு அரசு அதிகமாக ஸ்டிக்கர் ஒட்டுவது எங்கள் ஊரில் செல்போன் செய்கிறார்கள் என்பது. ஆனால், அது மத்திய அரசின் முழுமையான திட்டம். திமுக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 512 தேர்தல் வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் ஒவ்வொரு மேடையில் ஒவ்வொரு எண்ணிக்கை சொல்கிறார். வெறும் ஐம்பது தேர்தல் வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இரண்டு முறை பெட்ரோல், டீசல் குறைத்திருக்கிறோம். நாங்கள் ஏற்றவில்லை, மாநில அரசு குறைத்ததா? பாஜக அரசு ஆளும் மாநிலங்களில் விலையை குறைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் திமுக தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டும் கூட சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை.
2026-ல் கூட்டணி ஆட்சி என நான் சொல்லமாட்டேன். நான் பாஜக ஆட்சி என்று தான் சொல்வேன். பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என நினைப்பவன் நான்; பாஜகவின் வளர்ச்சிக்காக கடைசி வரை பாடுபடுவேன், கட்சி எடுக்கும் முடிவுக்கு தொண்டனாக நான் கட்டுப்படுவேன். அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் சரிபாதி தொகுதிகளில் பாஜக போட்டியிட வேண்டும் என்று நான் பிரதமர் மோடிக்கு எந்த கடிதமும் அனுப்பவில்லை. கடிதம் எழுதினால், நானே ஊடகங்களிடம் தெரிவிப்பேன். கட்சி முடிவு பற்றி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுவார். என்னை பொறுத்தவரை 2026ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தான் நான் சொல்வேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அல்ல. பாஜக ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.