“என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கும் செயல்தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள் முழுமையாக உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் டிராவில் தான் உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. 34 அமைப்புகளைச் சேர்ந்த 14 பஞ்சாயத்துக் காரர்கள் ஒரு தீர்ப்பு வழங்கினார்கள். அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர நான் தயாராக இருந்தேன். இரு பெரிய ஆளுமைகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நான் தயாராக இருந்தும் அன்புமணி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பின் எனக்குள் உள்ள இயற்கையாக கோபம் வெளியில் வந்து, நீயா நானா பார்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்து இப்போது செய்தியாளர்களை சந்திக்கிறேன்.
கட்சியில் எல்லாம் எனக்கே வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறார். எனது பேரன் தானே முகுந்தன். அவருக்கு பதவியை ஏன் கொடுக்க கூடாது என்று நான் கேட்டபோது, ‘அவர் கேட்டை சாத்திவிட்டு கொள்ளுப்பேரக் குழந்தைகளுடன் விளையாடட்டும்’ என்று சொல்கிறார். நான் இப்போதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறேன். பாட்டாளி சொந்தங்கள் என்னை குலதெய்வமாக நினைக்கிறார்கள். நான் அவர்களை எனது வழிகாட்டிகளாக மதிக்கிறேன். நான் 46 ஆண்டுகள் உருவாக்கி கட்டிக்காத்து காப்பாற்றிய கட்சி இது. இன்னும் ஓரிரு ஆண்டுகள் இக்கட்சிக்கு தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?. எனக்கு உரிமை இல்லையா என கேட்பதே எனக்கு அவமானமாக உள்ளது. ஒவ்வொரு செங்கல்லாக நான் கட்டிய பாமக எனும் மாளிகை இது. இந்த மாளிகையில் அவரை குடியேற்றிய என்னையே, கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வகையில் செயல்படுகிறார்.
என்னை சந்திக்க வரும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கவிடாமல் தடுத்து, என்னை மானபங்கம் செய்துவிட்டார். அன்று அமைதி காத்திருந்தால் அதிகாரம் அன்புமணிக்கு கிடைத்திருக்கும். அப்போதைய கூட்டத்துக்கு சிலர் மட்டுமே வந்தனர். அன்புமணியை நான் கட்சியை விட்டு நீக்கப்போவதாக சொல்லியுள்ளனர். அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா?
இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால் நானே அவருக்கு முடிசூட்டுவிழா நடத்தியிருப்பேன். இப்பிரச்சினைக்கு தீர்வு காண தாரக மந்திரங்கள். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தைக்கு பிறகே தனயன். அய்யாவுக்கு பின்னே அன்புமணி. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி நேர்மை தர்மம் ஆகும். என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள். எங்களுக்கு எல்லாமே அய்யாதான் என சொல்லிக்கொண்டே என்னை அதள பாதாளத்தில் தள்ளுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், சிறுமைப்படுத்துகிறார்கள். இதை எல்லாம் நான் உருவாக்கிய சமூக ஊடகப்பிரிவு, சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு எதிராக செய்கிறார்கள். என் கைவிரல் கொண்டே என் கண்ணை குத்திக்கொண்டேன். உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு உற்சவராக்கி கொண்டுசெல்கிறார்கள். இது எல்லாமே நாடகம், அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள்.
7 ஆண்டுகள் முன்பு பிரதமர் மோடி பதவியேற்புக்கு டெல்லி சென்றிருந்தேன். அப்போது அன்புமணி, ‘அப்பா நான் இனி இந்த கட்சியை பாத்துக்கிறேன்’ என்றார், நான் ஒன்றுமே சொல்லவில்லை. பின் விமானத்தில் அருகில் அமர்ந்து ‘தவறாக சொன்னால் மன்னித்துவிடுங்கள்’ என்றார். நான் இரு சொட்டு கண்ணீர் விட்டேன். அப்போதே அவருக்கு அதுபோன்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலால் நான் மகாபலிபுரத்தில் தங்கியிருந்தேன். இதனை அறிந்த மருமகள் சவுமியா, அங்கு வந்து அன்புமணியை தலைவராக்க வேண்டும் என சொன்னார். தேதி, இடம் பார்த்துவிட்டதாகவும் சொன்னார். நான் ஜிகே மணியை அழைத்து கேட்டேன். அவரும் ஜோதிடத்தின் அடிப்படையில் ஒன்றரை மாதம் பொறுத்து செய்யலாம் என்றார். அதுபோலவே அவருக்கு பதவி கொடுத்தேன். ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டேன். அப்போது சொன்னேன், என் குடும்ப பெண்கள் யாரும் கட்சி நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என்று கூறினேன். ஆனால் சவுமியா கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார், 1000 கோயிலுக்கு போயிருப்பார், அந்த கோயில்களில் என்ன வேண்டினார் எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.