விஜய் அண்ணா மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை: திவ்யா சத்யராஜ்!

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை கேள்வி கேட்கிறேன்” என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-

திமுக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கட்டணமில்லா மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், டைடல் பார்க் என்று சொல்லிக் கொண்டே போகலாம். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு திமுகவுக்கு மட்டுமே உள்ளது. பாஜக போன்ற பலவீனமான கட்சிகளுக்கு தமிழ்நாட்டை பற்றி எந்த புரிதலும் இல்லை.

அதேபோல் தவெக தலைவர் விஜய் அண்ணாவுடன் எனக்கு சொந்த பிரச்சனையும் கிடையாது. ஒரு அரசியல்வாதியாகவே கேள்வியை கேட்கிறேன். எதிர்க்கட்சிகள் இருக்கும் பெண்களுக்கும், உங்கள் கட்சியில் இருந்து வெளியில் வந்த பெண்களுக்கும் தவெகவினர் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டி இருக்கிறார்கள். இதனை அந்த பெண்ணின் தாய் யூட்யூப் சேனில் கூறி புலம்பி இருக்கிறார். உங்களுக்கு பாதுகாவலர்கள் இருப்பதை போல் அவங்களுக்கு பாதுகாவலர்கள் இல்லை அண்ணா. தவெகவின் தலைவராக இதனை விஜய் அண்ணா நிறுத்த வேண்டும். ஒரு நல்ல அரசியல்வாதி மக்கள் மீதுதான் கவனம் கொண்டிருக்க வேண்டுமே தவிர, அதிகாரத்தின் மீது ஆசை கொண்டிருக்க கூடாது. இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜின் மகளும், சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ். ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “துணை முதல்வர் உதயநிதி ஏசி கேரவனில், சொகுசு விமானத்தில் நண்பர்களின் திருமணத்துக்கு செல்லும் போலி அரசியல்வாதி கிடையாது” என்று கூறியிருந்தார். இதனை வைத்து அவர் தவெக தலைவர் விஜய்யைத்தான் மறைமுகமாக சாடுகிறார் என விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் திவ்யா சத்யராஜை கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.