திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி கள் இறக்க அனுமதி கேட்டு, பனை மரம் ஏறும் போராட்டம் நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சீமானின் இந்த போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியதாவது:-
கள்ளு இறக்கும் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் ஒரு 5 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்பார்கள். ஆனால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், மொத்தமாக எல்லோரும் பனை மரம் ஏறுவோம். தடை என்றால் அது உடைப்போம். அது எங்கள் பரம்பரையின் பழக்கம். ஒரேயொரு கேள்வி தான், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் கள்ளு இறக்க அனுமதி இருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிப்பது ஏன்? கள்ளு விஷம் என்றால், டாஸ்மாக் சாராயம் என்ன மிளகு ரசமா? கிருஷ்ணசாமியின் கருத்தை விட்டுவிடுங்கள்.
கள்ளு குடித்திருக்கிறேன். அது விஷம் அல்ல. தமிழினத்தின் மது ‘கள்’ அது ஆடு ,மாடுகளில் இருந்து வரும் பால் போல், பனம் பால், தென்னம் பால், ஈச்சம் பால் ஆகியவை மூலிகை சாறா இல்லையா.. கள்ளு என்பது இயற்கை அருங்கொடை. கள்ளு என்று சொல்லாமல் மூலிகை சாறு என்று சொல்லுங்கள். இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வரத்தான் போகிறது. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒரு மது இருக்கிறது. ரஷ்யாவில் ஒயின், ஜின் இருப்பது போல் தமிழ்நாட்டிற்கு கள். கள் என்பது உணவின் ஒரு பகுதி. அது மது அல்ல என்பதை அரசியல் சாசனம் கூறுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியில் கள் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. டாஸ்மாக் சாராய ஆலைகளை தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மட்டுமே நடத்தி வருகிறார்கள். உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் அவர்கள் தான். கள் இறக்க அனுமதி அளித்தால், டாஸ்மாக் விற்பனை குறைந்துவிடும் என்பதால், தடை விதித்துள்ளார்கள். நெல் எந்த மரத்தில் விளைகிறது என்று கேட்பதை போல்தான் ஆட்சியாளர்கள் கள் உருவாக்கப்படுவதற்கு விளக்கம் கொடுத்து வருகிறார்கள். கள் குடித்து உயிரிழந்தவர்கள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.