ஈரான் மோதலுக்கு நடுவே மோடிக்கு போன் போட்ட நெதன்யாகு!

இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே மோதல் வலுத்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நம் நாட்டை எடுத்து கொண்டால் இஸ்ரேல், ஈரான் உள்ளிட்டவை நல்ல நட்பு நாடுகளாகும். இப்படியான சூழலில் தான் நேற்று மாலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசரஅவசரமாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார்.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் இன்று உச்சமடைந்துள்ளது. இன்று காலையில் இஸ்ரேல், ஈரானை கடுமையாக தாக்கியது. இஸ்ரேல் தனது ட்ரோன், போர் விமானங்கள், ஏவுகணைகளை பயன்படுத்தி ஈரானின் ராணுவதளங்கள், அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் தளம் உள்ளிட்டவற்றை தாக்கியது. மொத்தம் 200 போர் விமானங்கள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. 100 இடங்களை குறிவைத்து மொத்தம் 300க்கும் அதிகமான குண்டுகள்வீசப்பட்டன. இந்த தாக்குதலில் ஈரான் நிலைக்குலைந்து போய் உள்ளது. ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் ராணுவ புரட்சிகரப் படையின் தலைமை கமாண்டராக இருந்த ஜெனரல் ஹொசைன் சலாமி, ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆலோசகராக பணியாற்றி வந்த அலி ஷம்கானி, ஈரான் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி வந்த முகமது பாகேரி, ஈரானின் ராணுவத்தில் கதாம் அல் அன்பியா மாகாணத்தின் தலைமையகத்தை வழிநடத்தி வந்த ஜெனரல் கோலம் அலி ரஷித் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் அணுசக்தி திட்டம் தொடர்பான முக்கிய 6 விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ஈரான் பதிலடியை தொடங்கி உள்ளது. இஸ்ரேலை குறிவைத்து ட்ரோன்களை ஏவி ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இஸ்ரேல் – ஈரான் இடையே கடும் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அவசரஅவசரமாக போன் செய்து பேசி உள்ளார். இந்த வேளையில் பிரதமர் மோடி இஸ்ரேல்- ஈரான் மோதல் தொடர்பாக கவலையை பகிர்ந்தார். இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, ‛‛ இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வளர்ந்து வரும் மோதல் (இஸ்ரேல் – ஈரான் பிரச்சனை) பற்றி விளக்கினார். இந்த வேளையில் இந்தியாவின் கவலை பற்றி நான் பகிர்ந்து கொண்டேன். பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்தினேன்” என்று கூறியுள்ளார்.

பொதுவாக இருநாடுகள் இடையே மோதல் ஏற்படும்போது தாக்குதல் நடத்தும் நாடும், தாக்குதலுக்கு உள்ளாகும் நாடும் தங்களின் நட்பு நாடுகளுடன் தொடர்பில் இருக்கும். நாட்டில் நிலவும் சூழல் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வார்கள். சமீபத்தில் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போதும் கூட நம் நாட்டின் அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் நம் நட்பு நாடுகளுடன் தொடர்பில் இருந்தனர். அதேபோல் நெதன்யாகு பிரதமர் மோடியிடம் பேசி நிலைமையை எடுத்து கூறியுள்ளார். பிரதமர் மோடியை தவிர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு தலைவர்களுடன் நெதன்யாகு பேசி உள்ளார். அப்போது ஈரான் – இஸ்ரேல் மோதல் பற்றி விளக்கி உள்ளார். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.