போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு காவல் துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். வெங்கடவரதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மா.சுப்பிரமணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்யப்பட்டுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காரணமாக அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.எனவே, குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறையை தள்ளிவைக்க வேண்டும். இதனை இறுதி வாய்ப்பாக வழங்க வேண்டும்” என கோரினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எவ்வித கூடுதல் கால அவகாசமும் வழங்க முடியாது எனக் கூறி அடுத்த விசாரணைக்குள் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவை பெற வேண்டும் என தெரிவித்தார். இல்லாவிட்டால், ஜூலை 24-ம் தேதி மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுப் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் எனக் கூறி அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.