தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் சார்பில் மாநில அளவிலான கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் உதித்ராஜ் பேசினார்.
நிறைவாக செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 11 ஆண்டுகளில் அமைப்புசாரா தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் மத்திய பாஜக அரசு பறித்துவிட்டது. தொழிலாளர் நலன் சார்ந்த 44 சட்டங்கள், அம்பானி, அதானிக்கு ஆதரவாக 4 ஆக குறைக்கப்பட்டன. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பணி பாதுகாப்பு, அடிப்படை ஊதிய உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் நவோதயா பள்ளிகளை தமிழகம் ஏற்கவில்லை. அதற்காக தமிழகத்துக்கான நிதியை நிறுத்தவில்லை. ஆனால் பாஜக, புதிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை எனக்கூறி கல்வி நிதியை நிறுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இண்டியா கூட்டணிக்கு பிரேமலதா வந்தால் வரவேற்பேன். தமிழகத்தை பொருத்தவரை, இண்டியா கூட்டணியின் தலைவரான ஸ்டாலின்தான் யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதை முடிவெடுப்பார். கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் இடம் கோரலாம். காங்கிரஸை பொருத்தவரை, அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்க வாய்ப்பில்லை. தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகள் மட்டுமல்லாது, சொல்லாத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதற்காக மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை கொண்டுவருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.