டாஸ்மாக் வழக்கு: ஆவணங்களை அளிக்க அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், சீலை அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று (ஜூன் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எதன் அடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற காரணத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி ஆவணங்களை நாளை (ஜூன் 18) தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், “வீட்டை சீல் வைக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாதபோது எப்படி சீல் வைக்கப்பட்டது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அமலாக்கத் துறை வழக்கறிஞர், வீடு சீல் வைக்கப்படவில்லை. தங்களை தொடர்பு கொள்ளாமல் கதவை திறக்க வேண்டாம் என்று நோட்டீஸ் மட்டும் தான் ஒட்டப்பட்டதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்?. தன்னுடைய வீட்டுக்குள் செல்ல அவர் அமலாக்கத் துறையிடம் அனுமதி பெற வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத் துறை தரப்பில், அந்த நோட்டீஸை அகற்றிவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “நோட்டீஸ் ஒட்ட அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒன்றை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டாம்” என தெரிவித்தனர்.

ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “2014முதல் 2021ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி பார் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்று கொண்டிருந்ததார்,” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.